Press "Enter" to skip to content

‘சர்ச்சை நாயகன்’ விநாயகன் செய்த ‘சம்பவங்கள்’ – ஒரு விரைவுப் பார்வை

கொச்சி: அடிக்கடி சர்ச்சை சம்பவங்களில் சிக்கும் மலையாள நடிகர் விநாயகன் இப்போதும், இதற்கு முன்பும் செய்த ‘சம்பவங்கள்’ குறித்து பார்ப்போம். அண்மையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் அழுத்தமான பகைவன் நடிகராக பாராட்டப்பட்டவர் நடிகர் விநாயகன். படத்தின் வெற்றி விழாவில் நடிகர் ரஜினியே அவரது நடிப்பை பாராட்டியிருந்தார். சமூக வலைதள ‘கன்டென்ட்’களில் ரஜினியை விட விநாயகனே வியாபித்திருந்தது சமீத்திய வரலாறு. இதற்கு முன்னதாக அவர் தமிழில் ‘திமிரு’, ‘சிலம்பாட்டம்’,‘மரியான்’ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். மலையாளத்தில் வெளியான ‘கம்மாட்டிப்பாடம்’ படத்துக்காக மாநில அளவில் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார்.

இந்நிலையில், கடந்த அக்டோபர் 24-ம் தேதி விநாயகன் தனது மனைவியிடம் பிரச்சினை செய்ததாக எழுந்த புகாரில், எர்ணாகுளம் வடக்கு காவல் நிலைய காவல் துறையினர் அவரை (காவல்) நிலையத்திற்கு வரவழைத்தனர். அங்கு வந்த விநாயகன் மது போதையில் இருந்துள்ளார். அவர் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உட்பட பல்வேறு பிரிவுகளில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். பிறகு, மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட அவர் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

மீ டூ புகார்: நடிகை நவ்யா நாயர், விநாயகன் நடித்திருந்த ‘ஒருத்தி‘ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விநாயகன், ‘Me Too’ இயக்கம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரிடம் ‘மீ டூ’ குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, 10 பெண்களுடன் அவர்களின் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் உறவு வைத்திருந்ததாகவும், பாலியல் உறவுதான் மீ டூ என்றால் இனியும் அதை தொடர்வேன் என பேசியிருந்தார். நாயகி நவ்யா நாயர் அமர்ந்திருந்தது மேடையில் அவர் இப்படி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், சர்ச்சையைத் தொடர்ந்து மன்னிப்புக் கோரினார்.

யார் அந்த உம்மன் சாண்டி? – கடந்த ஜூலை மாதம் கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் இறுதி ஊர்வலத்தின்போது விநாயகன், உம்மன் சாண்டி குறித்து பேசியது சர்ச்சை ஏற்படுத்தியது. அந்த காணொளியில் அவர், “யார் இந்த உம்மன் சாண்டி? அவரது மறைவு செய்திகளை இந்த அளவுக்கு பெரிதாக்குவதை ஊடகங்கள் நிறுத்த வேண்டும். அவருக்கு ஏன் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டும். உம்மன் சாண்டி இறந்துவிட்டார். அதற்காக என்ன செய்ய முடியும். என் தந்தையும் கூட தான் இறந்துவிட்டார்” என பேசியிருந்தார்.

இந்த காணொளி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து “ஊடகங்களை விமர்சித்தேனே தவிர உம்மன்சாண்டி மீது தனிப்பட்ட தாக்குதலை நிகழ்த்துவது எனது நோக்கமில்லை” என விளக்கமளித்திருந்தார் விநாயகன். எனினும், அந்த காணொளி காரணமாக எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் துறையினர், அவர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

கவிஞர் மிருதுளா தேவி: கடந்த 2019-ம் ஆண்டு கவிஞர் மிருதுளா தேவி, நடிகர் விநாயகனை தனது நிகழ்ச்சிக்கு அழைத்தபோது அவர் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தினார் என குற்றம்சாட்டியிருந்தார். ​​விநாயகன் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அவர் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விநாயகன் விளக்கமளித்தபோது, “சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது; எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளின் ரெக்அட்டைகளை நான் வைத்திருப்பதில்லை. ஆதாரம் இருந்து நான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் காவல் துறை என்னை கைது செய்து சிறையில் அடைக்கட்டும்” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »