Press "Enter" to skip to content

“அந்த ஃப்ளாஷ்பேக்கே பொய்தான்!” – ‘லியோ’ குறித்து லோகேஷ் கனகராஜ்

சென்னை: விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. “இந்தப் படத்தின் இரண்டாம் பாதி குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்” என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.

‘லியோ’ படத்தில் பலராலும் விமர்சிக்கப்பட்ட நரபலி ஃப்ளாஷ்பேக் காட்சி குறித்து பேட்டி ஒன்றில் லோகேஷ் கனகராஜ் கூறுகையில், “லியோ யார் என்ற கதையை பார்த்திபன் அவர் வாயால் சொல்லவில்லை. அந்தக் கதையை யாரோ ஒரு மூன்றாவது மனிதர் மன்சூர் அலிகான் சொல்வதுதானே. அவர் உண்மை சொல்லியிருக்கலாம். பொய் சொல்லியிருக்கலாம். அவர் தொடங்கும்போதே, எல்லா கதைக்கும் நிறைய பேருக்கு பல கோணங்கள் இருக்கும். இது என்னுடைய கோணம் என சொல்லிதான் ஆரம்பிப்பார். ஆனால், அதை தூக்கிவிட்டேன். காரணம், படத்தின் எடிட்டர் பிலோமின் ராஜ் தான், ‘அடுத்த 20 நிமிடம் நாம் சொல்வது பொய் என அழுத்தமாக நிறுவுவது போல இருக்கிறது. தூக்கிவிடலாம்’ என்றார். அதனால் அதை தூக்கிவிட்டோம்.” என்றார்.

இதன் மூலம் படத்தில் மன்சூர் அலிகான் சொல்லும் மொத்த நரபலி ஃப்ளாஷ்பேக்கும் பொய் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஒருபுறம் ஈர்த்திருந்தாலும், சிலர் இதனை விமர்சித்து வருகின்றனர். படத்திலேயே ஏதோ ஓரிடத்தில் அது பொய் என்பதை விளக்கியிருக்கலாம். அதற்கு பதிலாக படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து விமர்சனங்களுக்குப் பிறகு இயக்குநர் ஒருவர் படத்தை விளக்கிக்கொண்டிருப்பது திரைக்கதையின் பலவீனத்தை காட்டுவதாக இணையப் பயனாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »