Press "Enter" to skip to content

“மூன்று பாதிப்புகளும், மீளும் போராட்டங்களும்…” – நடிகை சமந்தா அனுபவ பகிர்வு

“சோர்வான தருணங்களில் தோல்வியடைந்த திருமணம், உடல்நல பாதிப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாமை ஆகிய மூன்றும் ஒன்று சேர்ந்து என்னை பாதிக்கும்” என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் “நான் எப்போதும் இல்லாத அளவுக்கு சோர்வாக உணரும் தருணங்களில் தோல்வியடைந்த திருமணமும், என்னுடைய உடல்நலமும், வேலையும் சேர்த்து என்னை பாதிக்கும். இந்த மூன்றும் ஒன்று சேர்ந்து தாக்கும். கடந்த 2 ஆண்டுகளாக நான் மிகவும் சோர்வுற்றிருந்தேன். இந்தக் காலக்கட்டத்தில் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நடிகர்கள் பற்றியும், அவர்கள் எதிர்கொண்ட பதற்றம் மற்றும் விமர்சனங்கள் குறித்து படித்து தெரிந்துகொண்டேன். அவர்களின் இந்தக் கதைகள் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அவர்களால் முடிந்தது, என்னாலும் முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. இந்த தேசத்தில் நீங்கள் நேசிக்கப்படும் ஒரு நட்சத்திரமாக இருக்கும்போது அதற்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருக்க வேண்டும். அது உங்களுக்கு கிடைத்த பரிசு.

நீங்கள் எத்தனை சூப்பர் ஹிட் மற்றும் ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தீர்கள், எத்தனை விருதுகளை வென்றுள்ளீர்கள் என்பதெல்லாம் கணக்கில்லை. வலியையும், கஷ்டங்களையும் தாண்டி மீண்டு வருகிறீர்களா என்பதுதான் முக்கியம். என்னுடைய தோல்விகள் பகிரங்கப்படுவதை நான் பொருட்படுத்துவதில்லை. உண்மையில் நான் முன்னேறிக் கொண்டிருக்கிறேன். என்னிடம் இருப்பதை வைத்து நான் போராடப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். இதேபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களும் என்னைப்போல தொடர்ந்து போராடும் வலிமையைப் பெறுவார்கள் என்று நம்புகிறேன்” என்று தன் அனுபவங்களை சமந்தா பகிர்ந்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »