Press "Enter" to skip to content

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – நடிகர் இளவரசுவுக்கு உயர்நீதிநீதி மன்றம் எச்சரிக்கை

சென்னை: காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசுவை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு சங்கத்தின் முன்னாள் ஊழியர்களுக்கு எதிராக திநகர் காவல் நிலையத்தில் நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளித்தது. புகார் தொடர்பான விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை எனக்கூறி, கடந்த 2022-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , விசாரணையை விரைவாக முடித்து, இறுதி அறிக்கையை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் நான்கு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் காவல் துறையினர் விசாரணையை முடிக்கவில்லை எனக்கூறி ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் செயலாளரும் நடிகருமான இளவரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின்போது, காவல்துறை வழக்கறிஞர் டிசம்பர் 12-ம் தேதி நடிகர் இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரான கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிளை சமர்ப்பித்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த இளவரசு தரப்பு வழக்கறிஞர், “டிசம்பர் 13-ம் தேதிதான்அவர் காவல் நிலையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்ததார். டிசம்பர் 12-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் படப்பிடிப்பில் இருந்தார். காவல்துறையினர் சமர்ப்பித்துள்ள கண்காணிப்பு தொலைக்காட்சி காட்சிகள் போலியானவை” என தெரிவித்திருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், குறிப்பிட்ட தேதியில் நடிகர் இளவரசு எங்கு இருந்தார்? என்பதற்கான மொபைல் லோகேஷன் விவரங்களையும், சிடிஆர் என்று சொல்லக்கூடிய மொபைல் அழைப்பு விவரங்களையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் சந்தோஷ் ஆஜராகி, நடிகர் இளவரசுவின் மொபைல் லொகேசன் விவரங்கள் மற்றும் சிடிஆர் விவரங்களை தாக்கல் செய்தார். இளவரசு தரப்பில், 12-ம் தேதி படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டதால் மாமல்லபுரம் செல்லவில்லை என்றும், தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

காவல்துறை சமர்ப்பித்த விவரங்களை ஆய்வு செய்த நீதிபதி, “இளவரசு காவல் நிலையத்தில் ஆஜரானதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நீதிமன்றத்தில் பொய் சொல்ல வேண்டாம். டிச.12-ம் தேதி காவல் நிலையத்தில் ஆஜரானதை கூறி மன்னிப்பு கோரினால், அதனை ஏற்க தயார். இல்லாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்து, இது தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஜன.30) தள்ளிவைத்தார்

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »