மும்பை: ‘ஃபைட்டர்’ படத்துக்காக தன் நண்பர்களை ஒருவருடகாலமாக சந்திக்காமல் இருந்ததாகவும், சமூகத்துடனான உறவு முற்றிலும் துண்டித்துவிட்டதாகவும் நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “என் வேலையைத் தாண்டி நான் ரசிக்க என் வாழ்வில் நிறைய விஷயங்களை சேர்க்க வேண்டியுள்ளது. இந்த அமைதியான வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். நான் ‘ஃபைட்டர்’ படத்தில் 3 வகையான வெவ்வேறு தோற்றம் கொண்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்தேன். இதற்காக சமூகத்துடனான என்னுடைய மொத்த உறவையும் துண்டித்துக்கொண்டேன்.
ஒருவருடமாக என்னுடைய நண்பர்கள் யாரையும் சந்திக்கவில்லை. நாள்தோறும் இரவு 9 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன்” என்றார். வாழ்க்கையையும், வேலையையும் சமமாக கருதவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஹிர்த்திக் ரோஷன், “உங்கள் வாழ்வில் 50 சதவீதத்தை வேலைக்காக ஒதுக்க வேண்டும். மீதி 50 சதவீதம் உங்களின் வாழ்க்கைக்காக இருக்க வேண்டும்” என்றார்.
ஃபைட்டர்: ‘வார்’, ‘பதான்’ படங்களை இயக்கிய சித்தார்த் ஆனந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தீபிகா படுகோன், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தை விஷால் சேகர் இசையமைத்துள்ளார். ஹிர்த்திக் ரோஷனின் இப்படம் உலக அளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Source: Hindu