Press "Enter" to skip to content

“அப்பா எனக்காக அழுதிருக்கிறார்” – ‘ப்ளூ விண்மீன்’ வெற்றி விழாவில் சாந்தனு உருக்கம்

சென்னை: “அப்பா என் வெற்றிக்காக ஏங்கி கண்ணீர்விட்டு அழுததாக அம்மா சொல்லியிருக்கிறார். அவரது கண்ணீரைத் துடைக்கும் வெற்றி ‘ப்ளூ விண்மீன்’ படம் மூலம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது” என நடிகர் சாந்தனு உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஜெயக்குமார் இயக்கத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன் நடிப்பில் திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ப்ளூ விண்மீன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய நடிகர் சாந்தனு, “என்னுடைய ஒவ்வொரு படத்தின் மேடையிலும் சொல்வார்கள், ‘வெற்றி விழாவில் சந்திப்போம்’ என்று. ஆனால், இன்று என் வாழ்வில் அப்படியொரு தருணம் அமைந்துள்ளது.

என்னால் இதை நம்பவே முடியவில்லை. மிகவும் எமோஷனலாக உணர்கிறேன். எனக்கு இந்த வெற்றியை கொடுத்த உங்களுக்கு நன்றி. என் வாழ்வில் இவ்வளவு பாசிடிவ் ரிவியூ கிடைத்ததில்லை. ‘சக்கரக்கட்டி’ ரிலீஸூக்குப் பின் 15 வருடங்கள், 5,600 நாட்களுக்குப் பிறகு எனக்கு வெற்றி கிடைத்துள்ளது. எல்லாவற்றையும் தாண்டி என்னுடைய பெற்றோருக்கு இந்த வெற்றி பெறும் சந்தோஷத்தை கொடுத்தது. என்னைவிட 100 மடங்கு என்னுடைய அப்பா, அம்மா தான் வெற்றிக்கான ஏக்கத்தில் இருந்தனர்.

15 வருடம் எனக்கும், அப்பாவுக்கும் இந்த ஏக்கம் இருந்தது. அதனை எனது அப்பா கடிதமாக எழுதியிருந்தார். “நான் நிறைய பேரை அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு வெற்றி கொடுத்திருக்கிறேன். ஆனால் என் பையனுக்கு வெற்றியை கொடுக்க முடியவில்லையே” என என் அப்பா கண்ணீர்விட்டதாக அம்மா சொல்லியிருக்கிறார். அன்றைக்கு நான் யோசித்தேன். அந்த கண்ணீரை துடைக்கும் அளவுக்கு ஒரு வெற்றிகிடைத்தால் எனக்கு போதும், அது இன்று ‘ப்ளூ விண்மீன்’ மூலமாக கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இந்த நன்றியை நான் என்றைக்கும் மறக்கமாட்டேன்” என்றார் உருக்கமாக.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »