Press "Enter" to skip to content

“அந்தக் கருத்து நான்‌ கூறியதே அல்ல… தமிழ்‌ மக்களிடம்‌ மன்னிப்புக் கேட்கிறேன்!” – நடிகை தன்யா பாலகிருஷ்ணா

சென்னை: தமிழர்களை இழிவுபடுத்தி கருத்து பதிவிட்டதாக கூறப்படும் நடிகை தன்யா பாலகிருஷ்ணாவுக்கு ‘லால் சலாம்’ படத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அவர் தன் மீதான சர்ச்சைக்கு தற்போது விளக்கம் அளித்துள்ளார். அத்துடன், அவர் மன்னிப்பும் கோரியுள்ளார்.

இது தொடர்பான அவரின் விளக்கம்: “நான்‌ செய்யும்‌ தொழில்‌ மேல்‌ சத்தியம்‌. கடந்த சில நாட்களாகச்‌ சமூக வலைதளங்களில்‌ தமிழர்களை இழிவுபடுத்தும்‌ விதமாக நான்‌ கூறியதாகப்‌ பகிரப்பட்டு வரும்‌ கருத்து நான்‌ கூறியதே அல்ல. 12 வருடம்‌ முன்பு இது நடந்தபோதே நான்‌ இதைத்‌ தெளிவுபடுத்த முயன்றேன்‌. அதையே இப்பொழுதும்‌ சொல்லிக்‌ கொள்ளவிரும்புகிறேன்‌. அந்தப் பதிவை நான்‌ பதிவிடவே இல்லை.

அந்த ஸ்கீர்ன்‌ ஷாட்‌ , ஒரு ட்ரோல்‌ செய்யும்‌ நபரால்‌ உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும்‌ என்‌ சக்திக்கு உட்பட்டு என்னால்‌ முடியவில்லை. இந்த 12 வருடங்கள்‌, நான்‌ இதைப்‌பற்றி பேசாமல்‌ இருந்ததற்குக்‌ காரணம்‌ அந்த சம்பவம்‌ நடந்த சமயத்தில்‌ என்‌ மீதும்‌ என்‌ குடும்பத்தின்‌ மீதும்‌ வந்த அச்சுறுத்தல்கள்தான்‌. அதிலிருந்து விலகி இருப்பதே எனக்கு சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில்‌ மீண்டும்‌ இதைத்‌ தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌. அந்த கருத்து நான்‌ கூறியதே அல்ல.

நான்‌ என்‌ திரைப்படம் பயணத்தைத்‌ துவங்கியதே தமிழ்‌ திரைப்படத்தில்‌ தான்‌. தமிழ்‌ திரைப்படத்தில்‌ வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான்‌ என்றும்‌ நன்றி கடன்‌பட்டுள்ளேன்‌. அப்பொழுதும்‌ இப்பொழுதும்‌ என்‌ நெருங்கிய நண்பர்களில்‌ பலரும்‌ தமிழர்களே. அதனால்‌, விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான்‌ என்‌ கனவிலும்‌ நினைக்க மாட்டேன்‌. என்‌ ஆரம்ப காலங்களில்‌ தமிழ்‌ திரைப்படம் ரசிகர்களும்‌ ஊடகங்களும்‌ கொடுத்த ஆதரவே இத்தனை வருடம்‌ தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய்‌ அமைந்திருக்கிறது.

மனிதாபிமான அடிப்படையிலும்‌, நான்‌ யாரையும்‌ காயப்படுத்தும்‌ விதத்தில்‌ எந்த விதசொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள்‌ அல்ல. இந்த சம்பவம்‌ நடந்ததற்குப்‌ பின்‌ நான்‌ சில தமிழ்‌ திரைப்படங்களும்‌ (ராஜா ராணி, நீதானே என்‌ பொன்‌ வசந்தம்‌, கார்பன்‌) சில தமிழ்‌ வெப்‌ சீரிஸ்களிலும்‌ நடித்துள்ளேன்‌. அப்போது இது போன்ற எதிர்வினைகள்‌ எதுவும்‌ நேரவில்லை. சர்ச்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும்‌, துரதிர்ஷ்டவசமாக என்‌ பெயர்‌ இதில்‌ சம்பந்தப்படுத்தப்பட்டுவிட்டது. அதனால்‌ நான்‌ தமிழ்‌ மக்களிடம்‌ முழு மனதாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்‌. என்‌ பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும்‌ விதமாக நடந்த செயலுக்கு வருத்தம்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌.

இந்த சர்ச்சையினால்‌ ரஜினிகாந்த்‌, ஐஷ்வர்யா ரஜினிகாந்த்‌ மற்றும்‌ ரஜினிகாந்த்‌ ரசிகர்கள்‌ அனைவர்களுக்கும்‌ ஏற்பட்ட சிரமங்களுக்கும்‌ மன உளைச்சலுக்கும்‌ எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்‌. நான்‌ இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள்‌ இல்லாமல்‌ தவித்துக்கொண்டு உங்கள்‌ முன்‌ இந்த கோரிக்கையை வைக்கிறேன்‌. என்‌ தொழில்‌ மேல்‌ சத்தியம்‌ செய்து நான்‌ கூறும்‌ இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள்‌ என்ற நம்பிக்கையோடு தன்யா பாலகிருஷ்ணா” என குறிப்பிட்டுள்ளார்.

பின்னணி: நடிகை தன்யா பாலகிருஷ்ணா ‘லால் சலாம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஒலிநாடா வெளியீட்டு விழாவிலும் தன்யா கலந்து கொண்டார். இதனையடுத்து சமூக வலைதளங்களில் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்பு தன்யா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டதாக ஒரு பதிவின் ஸ்கீர்ன்ஷாட்டை பகிர்ந்து அவரை கடுமையாக சாடிவந்தனர்.

அதில் அவர், “அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப்படுத்துகிறார்கள். உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?” என அதில் எழுதியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அது தன்னுடைய கருத்தே அல்ல என்று தன்யா மீண்டும் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »