Press "Enter" to skip to content

லைகா – விஷால் இடையிலான பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் நியமனம்: உயர்நீதிநீதி மன்றம் உத்தரவு 

சென்னை: லைகா படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் விஷால் இடையேயான பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாத காலத்துக்குள் ஆய்வு குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

‘விஷால் பிலிம் பேக்டரி’ படத் தயாரிப்பு நிறுவனத்துக்காக திரைப்படம் பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையை திருப்பி செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி 15 கோடி ரூபாயை வழக்கு கணக்கில் வைப்பீடு செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை இரு நீதிபதிகள் அமர்வும் உறுதி செய்திருந்தது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தங்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப் பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய ஆடிட்டர் ஒருவரை நியமிக்க விஷால் வைத்த கோரிக்கையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டது.

இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இருதரப்பு கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்ய ஆடிட்டர் ஶ்ரீகிருஷ்ணா என்பவரை நியமித்து உத்தரவிட்டார். அவரிடம் இருதரப்பும், 3 ஆண்டுகளுக்கான வருமான வரி கணக்கு விவரங்களையும், இன்றைய நாள் வரைக்குமான வங்கி கணக்கு விவரங்களையும் ஆடிட்டரிடம் தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும், உரிய முறையில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணாவுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை மார்ச் 4-ம் தேதி தள்ளிவைத்தார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »