Press "Enter" to skip to content

“மலிவான விளம்பர உத்தி” – பூனம் பாண்டேவை சாடிய திரை பிரபலங்கள் 

மும்பை: புற்றுநோயால் இறந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், விழிப்புணர்வுக்காகவே அவ்வாறு கூறியதாக காணொளி வெளியிட்ட நடிகை பூனம் பாண்டேவுக்கு பாலிவுட் பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் காணொளிக்களையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் உயிரிழந்ததாக நேற்று தகவல் வெளியானது. இந்த செய்தி அவரது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியானதால் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அவரது இறப்பு குறித்து இரங்கல் தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து, இன்று (பிப்.03) பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு காணொளி பதிவு வெளியானது. அதில் பேசிய அவர், “நான் உயிரோடு தான் இருக்கிறேன். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக நான் இறக்கவில்லை” என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பேசிய அவர், “கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பற்றிய உரையாடலை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்காகவே நான் இறந்ததாக கூறினேன். மற்ற புற்றுநோய்களை போலல்லாமல், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் முற்றிலும் தடுக்கக்கூடியது” என்று தெரிவித்தார்.

பூனம் பாண்டேவின் இந்த உத்தி சமூக வலைதளங்களில் ரசிக்கப்படவில்லை. அவரது மறைவுச் செய்திக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் பலரும் அவரை சரமாரியாக சாடத் தொடங்கிவிட்டனர். இந்த வரிசையில் பாலிவுட் பிரபலங்கள் பலரும் இணைந்து கொண்டனர். நடிகைகள் மந்திரா பேடி, பிபாஷா பாசு, இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்டோர் பூனம் பாண்டேவின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

விவேக் அக்னிஹோத்ரி: இது உண்மையில் ஹாட்டர்ஃப்ளை என்ற நிறுவனத்துக்கான விளம்பரம் ஆகும். இது எவ்வளோ மோசமான செயல்?

பிபாஷா பாசு: இது மோசமான செயல் என்பதைத் தாண்டி, இவர் மட்டுமின்றி இதற்கு பின்னால் இருக்கும் பிஆர் குழுவும் வெட்கப்படவேண்டும்.

மந்திரா பேடி: அந்த முட்டாள் பெண்ணுக்கு ஏற்கனவே கிடைத்ததை போல அதிக கவனம் தரக்கூடாது. ஆனால் இது மிகவும் பரிதாபகரமான, மலிவான மற்றும் இழிவான விளம்பர ஸ்டண்ட் ஆகும். அவர் புறக்கணிக்கப்பட வேண்டும்.

ஆர்த்தி சிங்: அருவருப்பு… இது விழிப்புணர்வு அல்ல. நான் பிறக்கும்போது என் தாயை புற்றுநோய்க்கு இழந்தேன். அதே புற்றுநோய்க்கு என் தந்தையையும் இழந்தேன். இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. அனைவரது உணர்வுகளுடனும் நீங்கள் விளையாடியுள்ளீர்கள். மனிதர்களால் இவ்வளவு கீழ்நிலைக்கு இறங்கமுடியும் என்பது அவமானமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

தாஹிரா காஷ்யப்: இன்று மிக மிக கீழ்த்தரமான செயலை கண்டேன். கோபம், அதிர்ச்சி, நம்பிக்கையின்மை ஆகிய உணர்வுகளுக்கு இடையே அல்லாடுகிறேன். நாம் என்னவாக மாறிக் கொண்டிருக்கிறோம்? இந்த மலினமான விளம்பரத்தால் கடும் விரக்தியில் இருக்கிறேன். அந்த நபர் எந்த முக்கியத்துவத்திற்கும் தகுதியற்றவர் என்பதற்காக அவரது பெயரை இங்கே குறிப்பிடவில்லை.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »