Press "Enter" to skip to content

புதுச்சேரியில் படப்பிடிப்புக்காக வந்த விஜய் வேனில் ஏறி கையசைப்பு – ரசிகர்கள் குவிந்ததால் கடும் நெரிசல்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்புக்காக நடிகர் விஜய் வந்ததையறிந்து குவிந்த ரசிகர்களால் புதுச்சேரி- கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மில் வாயிலில் வேனில் ஏறி ரசிகர்களை பார்த்து விஜய் கை அசைத்து புறப்பட்டார்.

புதுச்சேரியில் ஒரு காலத்தில் முக்கிய பஞ்சாலையான ஏஎஃப்டி தற்போது மூடப்பட்டுள்ளது. இங்கு படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. அண்மையில் ‘லால் சலாம்’ படப்பிடிப்புக்காக ரஜினி வந்திருந்தார். இந்நிலையில் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கோட்’ திரைப்படத்துக்காக புதுச்சேரி- கடலூர் சாலையிலுள்ள ஏஎஃப்டி பஞ்சாலையில் படப்பிடிப்பு அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. அதில் படப்பிடிப்பில் பங்கேற்க இன்று மதியத்துக்கு பிறகு நடிகர் விஜய் வந்தார்.

தமிழக வெற்றி கழகம் தொடங்கி தலைவரான பிறகு நடிகர் விஜய் படப்பிடிப்புக்காக வந்ததால் ஏஎஃப்டி பஞ்சாலை முன்பு ரசிகர்கள், ரசிகைகள் ஏராளமானோர் குவிந்தனர்.ஒருக்கட்டத்தில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதத்தொடங்கியது. போலீஸாரும் போதிய அளவில் இல்லை. இதனால் அச்சாலையெங்கும் நெரிசல் ஏற்பட்டது. இச்சூழலில் கட்சித்தொண்டர்களை அமைதிகாக்குமாறு பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் ஏஎஃப்டி உள்ளேயிருந்து தெரிவித்தார்.

ரசிகர்கள் விஜய்யை பார்க்க கோஷம் எழுப்பினர். நெரிசல் அதிகரித்ததால் அப்பகுதியில் பேருந்துகள் செல்லாமல் திரும்பி செல்லத்தொடங்கின. பலரும் விஜய்யை பார்க்க சாலையிலேயே நின்றதால் சாலையில் போக்குவரத்து செல்ல நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து மாலை ஏஎஃப்டி வாயில் முன்பு பெரிய வேன் நிறுத்தப்பட்டு, அதில் ஏறி விஜய் ரசிகர்களை நோக்கி கை அசைத்தார். அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் கூச்சலிடத் தொடங்கினர். வேனில் ஏறி கை அசைத்த போது, அவருக்கு ரசிகர்கள் மாலை அணிவித்தனர். அதை அணிந்துகொண்ட விஜய், பின்னர், அதை ரசிகர்களிடமே கொடுத்து விட்டு மீண்டும் படப்பிடிப்பு தளத்துக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்றார்.இதையடுத்து ரசிகர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »