நாராயண குரு, 19-ம் நூற்றாண்டில் தோன்றிய அருளாளர்களில் வித்தியாசமானவர். சர்வ சமய நல்லிணக்கக் கருத்துகளையும் இறைவன் படைப்பில் அனைவரும் சமம் என்பதை தம்முடைய செயலின் வழியாக நிரூபித்துக் காட்டிய சமூக சீர்திருத்தவாதி. அவரின் வாழ்க்கையை நாடகமாக்கியதற்காகவே குடந்தை மாலியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நாராயண குருவின் நிறை வாழ்விலிருந்து தேர்ந்தெடுத்த சில சம்பவங்களை முத்து முத்தாகக் கோத்து அழகானதொரு மாலையாக்கியிருக்கிறார் மாலி. கே.ஆர்.எஸ். குமார் தன் மேம்பட்ட நடிப்புத் திறனால், மேடையில் நாராயண குருவையே கண்முன் கொண்டுவந்தார். நாராயண குருவின் சீடர்களில் முக்கியமானவரான ‘பல்ப்’ எனப்படும் பத்மநாபன் பாத்திரத்தில் நடித்த ஆனந்த் ஸ்ரீனிவாசன், டி.எஸ்.ஆனந்தி, மதுமிதா, நரசிம்ம பாரதி, வசந்தகுமார், ரவிக்குமார் மற்றும் குழந்தை நட்சத்திரங்களும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தனர்.
பக்தியின் வழியாகவும் கல்வியின் வழியாகவும் மனித நேயத்தை தம் வாழ்நாள் முழுவதும் பரப்பிய நாராயண குருவை அவரின் சம காலத்தில் வாழ்ந்த மகாகவி ரவீந்திரநாத் தாகூர், காந்தி உள்ளிட்டோர் சந்தித்து பேசிய தருணங்களையும் காட்சிகளின் வழியாகக் கடத்தியது வரலாற்று முக்கியத்துவமான சந்திப்புகளை நாடகத்தின் மூலம் ஆவணப்படுத்துவதாக அமைந்தது.
மாலியின் நாடகத்துகே உரிய புரட்சி வசனங்களுக்கும் குறைவில்லாமல், அதேநேரம், நாராயண குரு எனும் மகானின் பன்முகத் திறமைகளையும் இன்றைய தலைமுறைக்கு சுவாரஸ்யமான காட்சி அமைப்புகளின் மூலம் கொண்டுசேர்த்தது நாடகம்.
நாடகம் நடக்கும் காலத்துக்கேற்ற சூழலை அரங்கத்தின் மேடைக்குக் கொண்டுவந்திருந்தார் பத்மா ஸ்டேஜ் கண்ணன், ஒலியும், ஒளியும் இதமாக இருந்ததற்குக் காரணம் கலைவாணர் கிச்சா! நாடகத்தில் ஒலித்த பாடல்களுக்கு (பாடலாசிரியர் பா.வீரராகவன்) இசையமைத்ததுடன் இனிமையாகவும் பாடியசவுமியா ராம்நாராயணின் குரல் நெகிழ்ச்சியாக அமைந்திருந்தது.
மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் அரங்கேறிய ‘மகான் நாராயண குரு’ நாடகம், நாட்டின் இன்றைய சூழலில் நாராயண குருவின் சிந்தனைகள் காலத்தின் கட்டாயம் என்பதைச் சொல்லாமல் சொல்லின!
Source: Hindu