Press "Enter" to skip to content

“தென்னிந்திய திரைப்படத்தில் நேர்த்தி இருக்கிறது” – நடிகர் இம்ரான் ஹாஸ்மி புகழாரம்

மும்பை: தென்னிந்திய திரைப்படங்களில் ஒரு நேர்த்தி இருக்கிறது. தென்னிந்திய இயக்குநர்கள் தங்கள் படங்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் திரையில் தெரிகிறது” என்று பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஸ்மி புகழாரம் சூட்டியுள்ளார்.

சுஜீத் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படம் ‘ஒஜி’. இதில் இம்ரான் ஹாஸ்மி பகைவனாக நடிக்கிறார். இது அவர் நடிக்கும் முதல் தென்னிந்தியப் படம் ஆகும். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “தென்னிந்திய திரைப்படம் துறையில் நான் ஒரு படத்தில் நடிப்பேன் என்று கற்பனை கூட செய்ததில்லை. சுஜீத் மிகச் சிறந்த இயக்குநர். படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது.

தென்னிந்திய இயக்குநர்கள் நம்மை (பாலிவுட்) விட மிக நேர்த்தியானவர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் தங்கள் படங்களுக்காக செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவும் திரையில் தெரிகிறது. இந்தி திரைப்படத்தில் தேவையற்ற விஷயங்களுக்காக பணம் வீணடிக்கப்படுகிறது. இதனால் அவை திரையில் தெரிவதில்லை.

விசுவல் எஃபெக்ட்ஸ் என்று வரும்போது தென்னிந்திய திரைப்படத்தில் ஒரு நேர்த்தி இருக்கிறது. தென்னிந்தியத் திரைப்படங்கள் மற்றும் இயக்குநர்களிடம் இருந்து இந்தி திரைப்படம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது” என்று கூறினார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »