Press "Enter" to skip to content

நரசுஸ் காபி நிறுவனத்தின் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’

சென்னையில் தடுக்கி விழுந்த இடங்களில் எல்லாம் திரைப்படம் ஸ்டூடியோக்கள் இருந்த காலம் ஒன்று உண்டு. சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட ஸ்டூடியோக்கள் அப்போது இருந்தன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் இங்கு நடைபெற்றிருக்கின்றன. அதில் கிண்டியில் இருந்த நரசு ஸ்டூடியோவும் ஒன்று. பிரபலமான நரசுஸ் காபி நிறுவனத்தின் அதிபர் வி.எல்.நரசுவின் ஸ்டூடியோ இது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களின் படப்பிடிப்புகள் நடந்த இந்த ஸ்டூடியோ, பிறகு கேம்பகோலா நிறுவனத்துக்கு விற்கப்பட்டது.

வி.எல்.நரசு முதலில் விநியோகஸ்தராகி பிறகு படங்களைத் தயாரிக்கத் தொடங்கினார். மார்க்கண்டேயா, வெள்ளி, துளிவிஷம் உட்பட சில படங்களை இந்நிறுவனம் தயாரித்திருக்கிறது. அதில் ஒன்று, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’. படத்தின் தலைப்பிலேயே கதை இருக்கிறது.

எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி, பிரேம் நசீர், கிரிஜா, வி.கே.ராமசாமி, எஸ்.வி.சுப்பையா என பலர் நடித்த இந்தப் படத்தை டி.எஸ்.ராஜகோபால் இயக்கி இருந்தார். ஹாலிவுட்டின் வில்லியம் பெர்க்குடன் இணைந்து டி.ஆர். சுந்தரம் தயாரித்த ‘தி ஜங்கிள்’ என்ற ஆங்கிலப் படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் டி.எஸ்.ராஜகோபால், தங்கமலர், மகளே உன் சமத்து, நாகபூஜை (கன்னடம்) உட்பட சில படங்களை இயக்கியவர் இவர்.

இந்தப் படத்தின் திரைக்கதை, வசனத்தை துறையூர் மூர்த்தி எழுதியிருந்தார். வி.குமாரதேவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். டி.சலபதி ராவ் இசைஅமைத்திருந்த இந்தப் படத்துக்கு தஞ்சை ராமையா தாஸ் பாடல்கள் எழுதினார். ஒற்றுமையை வலியுறுத்தும் ‘ஜெய ஜெய ஜெய பாரதி’ என்ற பாடலுடன் படம் தொடங்கும். ஜானகி பாடிய,ஒண்ணு வேணுமா இல்லை ரெண்டு வேணுமா உட்பட சில பாடல்கள் அப்போது ஹிட் லிஸ்டில் இருந்தன.

எஸ்.எஸ்.ராஜேந்திரனின் தெளிவான தமிழ் உச்சரிப்பும் நடிப்பும் இந்தப் படத்தில் பேசப்பட்டது. சரோஜாதேவி, தெலுங்கு நடிகை கிரிஜா, மலையாளியாக வரும் பிரேம் நசீர் ஆகியோரின் நடிப்பும் படத்தில் இடம்பெறும் நடனங்களும் பாராட்டப்பட்டன.

1958-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாக வேண்டிய இந்தப் படம் சில காரணங்களால் தள்ளிப் போனது. பின்னர் 1959-ம் ஆண்டு இதே தேதியில் வெளியீடு ஆனது.

இந்தப் படத்தின் தலைப்பில் வி. சேகரும் ஒரு படத்தை இயக்கியுள்ளார். அதில், கரண், நாசர், வடிவேலு, குஷ்பு, விவேக், ரோஜா உட்பட பலர் நடித்திருந்தனர்

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »