Press "Enter" to skip to content

100+ திரையரங்குகளில் ஜீவாவின் ‘கோ’ படம் ரீ-வெளியீடு

சென்னை: ஜீவா நடித்த ‘கோ’ திரைப்படம் மார்ச் 1-ம் தேதி தமிழகம், கேரளா, கர்நாடகாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரீ-வெளியீடு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்ட்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்த ‘கோ’ படத்தை கே.வி.ஆனந்த் இயக்கியிருந்தார். இதில் ஜீவா, கார்த்திகா, அஜ்மல், பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ், பாவனை வெங்கட், ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கு இசையமைத்திருந்தார்.

ரூ.20 கோடி வரவு செலவுத் திட்டத்தில் உருவான இப்படம் ரூ.50 கோடியை வசூலித்தது. அரசியல் கலந்த ஆக்‌ஷன் த்ரில்லரில் உருவானது இப்படம். மக்களவைத் தேர்தல் வர உள்ள சூழலில், இப்படம் வரும் மார்ச் 1-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ-வெளியீடு செய்யப்பட உள்ளது.

இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில், “நாங்கள் தயாரித்தப் படங்களில் ‘கோ’ எங்களுக்கு வெற்றிகரமான படைப்பு. இந்தத் திரைப்படத்தின் வெற்றி எங்களுக்கு விவரிக்க முடியாத மனநிறைவையும் தந்தது. பார்வையாளர்கள் அதை திரைப்படத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாகக் கொண்டாடினர். இது வெளியாகி பத்து வருடங்களுக்கும் மேலாகிறது. ஆனால் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்தின் மேஜிக், ஜீவா, அஜ்மல் ஆகியோரின் அபாரமான நடிப்பு மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் அற்புதமான இசையால் படம் இன்றும் சோர்வு ஏற்படுத்தாமல் ரசிக்கக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.

சரியான கதையை பொறுப்போடு பார்வையாளர்களுக்குக் கொண்டு சென்றதால்தான் இந்தப் படம் வெற்றிப் பெற்றது. இப்போது, தற்போதைய தலைமுறை இளைஞர்களுக்காக இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மார்ச் 1, 2024 அன்று தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் 100-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படத்தை மீண்டும் வெளியிடவுள்ளோம். படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் நம்மோடு இல்லாத இந்த சமயத்தில் இந்தப் படத்தை மீண்டும் வெளியிடுவது ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் படக்குழுவினர் என அனைவருக்கும் எமோஷனலான தருணம் இது” என்றார்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »