Press "Enter" to skip to content

கதை தெரியாமல்தான் விஜய் படத்தில் நடிக்கிறேன்: சொல்கிறார் வைபவ்

சென்னை: வைபவ், தான்யா ஹோப், நந்திதா ஸ்வேதா, சரஸ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ரணம் அறம் தவறேல்’. அறிமுக இயக்குநர் ஷெரீஃப் இயக்கியுள்ளார். அரோல் கரோலி இசையமைத்திருக்கும் இந்தப் படத்துக்கு பாலாஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். மது நாகராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் பட விளம்பரம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

படம் பற்றி வைபவ் கூறும்போது, “ரணம் படத்தில் நல்ல செய்தி இருக்கிறது. இது எனது 25-வது படம். கண்டிப்பாக இந்தப் படம் எனக்கு முக்கியமானதாக இருக்கும். இயக்குநர் சிறப்பாக இயக்கி இருக்கிறார். இதுபோன்ற ஜானர் படத்தில் இதற்கு முன் நடித்ததில்லை. விஜய்யின் கோட் படத்திலும் நடித்து வருகிறேன். அது என்ன கதை என்பது பற்றி எனக்குத் தெரியாது. கதை தெரியாமல்தான் அதில் நடித்து வருகிறேன். வெங்கட் பிரபு எப்போதும் எனக்குக் கதை சொன்னதில்லை. நானும் கேட்டதில்லை. அஜித்துடனும் நடித்து விட்டேன். விஜய்யுடனும் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

இயக்குநர் ஷெரீஃப் பேசும்போது, “ அறம், தர்மம் என்பது தானம் மட்டுமல்ல; உண்மைக்காகக் குரல் கொடுப்பது; அநியாயத்தை எதிர்ப்பதும் தர்மம் மற்றும் அறம் தான். அதை நாம் யோசிக்காமல் செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி இந்தப்படம் எடுக்கப் பட்டுள்ளது” என்றார்.

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன், இசையமைப்பாளர் அரோல் கரோலி , நடிகைகள் தான்யா ஹோப், சரஸ் மேனன், தயாரிப்பாளர் மது நாகராஜ் உட்பட படக்குழுவினர் பேசினர்.

Source: Hindu

More from செய்திகள்More posts in செய்திகள் »