ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.
கடைசியாக 2016-ம் ஆண்டு பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் நடந்தது.
2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக்கை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) பாதிப்பு காரணமாக ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை டோக்கியோவில் நடக்கிறது. பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுகிறது.
தற்போது ஜப்பானில் அவசர நிலை இருந்தாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று போட்டி அமைப்புக் குழு தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றவர்கள் உள்பட 148 இந்திய விளையாட்டு வீரர்கள் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பத்ரா கூறியதாவது:-
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 148 வீரர்- வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இதில் 17 பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டுள்ளனர். 131 பேர் முதல் டோசை செலுத்திக்கொண்டுள்ளனர்.
மேலும் இவர்களை தவிர பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றவர்களில் 13 பேர் முதல் டோஸ் செலுத்திக்கொண்டனர். இருவர் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளனர்.பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு 24-ந்தேதி தொடங்குகிறது.
பாரா தடகள வீரர்களை சேர்த்து இதுவரை மொத்தம் 163 வீரர்கள் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். அதே நேரம் ஒலிம்பிக் தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளில் 87 பேர் முதல் டோசும், 23 பேர் இரண்டாவது டோசும் செலுத்திக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இதுவரை 90-க்கும் மேற்பட்ட இந்திய வீரர் வீராங்கனைகள் தகுதி பெற்றுள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தமிழகத்தை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி முதல் டோஸ் தடுப்பூசியை நேற்று செலுத்திக்கொண்டார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar