விராட் கோலி தொடர்ந்து ஃபார்ம் இன்றி தவித்து வருவது குறித்து பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு ரோகித் சர்மா பதில் அளித்தார்.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நாளை தொடங்குகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். மூன்று போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றாலும், விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் ஒருநாள் போட்டியில் 8 ரன்களிலும், 2-வது போட்டியில் 18 ரன்களிலும், 3-வது போட்டியில் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். மூன்று போட்டிகளில் 26 ரன்களே அடித்தார். சராசரி 8.67 ஆகும். இது அவருக்கு மோசமான தொடராகும்.
விராட் கோலி இப்படியே விளையாடினால் கடும் சவால் நேரிடும். அணியில் தொடர்ந்து நீடிப்பதில் சிக்கல் ஏற்படும் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நாளை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக டி20 கிரிக்கெட் தொடங்கும் நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உங்களை போன்ற நபர்கள் அமைதியாக இருக்கும்போது, அவர் ‘ஆல்ரைட்’டாக இருப்பார் என நினைக்கிறேன். உங்கள் பக்கத்தில் இருந்து நாங்கள் அதிக அளவில் பேச வேண்டியதில்லை. அப்படி இருந்தால் எல்லாவற்றையும் பற்றி பேச வேண்டிய நிலை ஏற்படும்.
நான் பார்த்த வரையிலும் அவரை சிறந்த மனநிலையுடன்தான் இருக்கிறார். 10 வருடத்திற்கு மேலாக சர்வதேச கிரிக்கெட் அணியில் ஒரு வீரராக உள்ளார். 10 வருடத்திற்கு மேல் அணியில் இருக்கும் ஒரு வீரருக்கு நெருக்கடியை எப்படி சமாளிப்பது, சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது உள்ளிட்ட எல்லாவற்றையும் பற்றி தெரியும். இது எல்லாம் உங்களை போன்ற நபர்களிடம் இருந்துதான் உருவாகிறது. உங்களை போன்றவர்கள் சற்று அமைதியாக இருந்தால், எல்லாம் அந்தந்த இடத்தில் சரியாக இருக்கும்’’ என்றார்.
மூன்று டி20 போட்டிகளும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar