Press "Enter" to skip to content

ஐ.பி.எல். திருவிழா நாளை தொடக்கம்: புதிய கேப்டன் தலைமையில் களமிறங்க காத்திருக்கும் சிஎஸ்கே

ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 தடவையும் மோத வேண்டும்.

ஐ.பி.எல். (இந்தியன் பிரிமீயர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப்போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப்போட்டி வர்த்தகரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது.

இதுவரை 14 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளன.

15-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (26-ந் தேதி) தொடங்குகிறது. மே 29-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

கொரோனா காரணமாக ஐ.பி.எல் லீக் ஆட்டங்கள் அனைத்தும் மராட்டிய மாநிலத்தில் நடத்தப்படுகிறது. மும்பையில் உள்ள வான்கடே , பிராபோர்ன் ஸ்டேடியங்கள், நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல், புனேயில் உள்ள எம்.சி.ஏ. ஆகிய 4 மைதானங்களில் போட்டி நடக்கிறது.

இந்த பருவத்தில் 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. ஆர்.பி.எஸ்.ஜி. நிறுவனம் லக்னோ நகரை மையமாக கொண்ட அணியை ரூ.7,090 கோடிக்கும் , சி.வி.சி நிறுவனம் அகமதாபாத் அணியை ரூ.5,625 கோடிக்கும் ஏலத்தில் எடுத்தன.

இந்த புதிய அணிகள் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இதனால் 2011 ஆண்டு போட்டியை போல இந்த ஐ.பி.எல். தொட ரில் 10 அணிகள் விளையாடுகின்றன.

10 அணிகள் கலந்து கொள்வதால் போட்டி முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடுவதில் எந்த மாற்றமும் இல்லை. 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.

கடந்தகால போட்டிகளின் முடிவின்படி அதாவது தரவரிசைப்படி அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன் விவரம்:-

குரூப் “ஏ”: மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , ராஜஸ்தான் ராயல்ஸ் , டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.

குரூப் “பி” : நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ( சி.எஸ்.கே.) சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ்.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறையும், ஒரு அணியுடன் மட்டும் 2 தடவையும் மோத வேண்டும்.

உதாரணத்திற்கு 2-வது தர வரிசையில் இருக்கும் சி.எஸ்.கே . தனது பிரிவில் உள்ள ஐதராபாத் , பெங்களூர், பஞ்சாப், குஜராத் ஆகிய அணிகளுடன் தலா 2 முறையும், “ஏ” பிரிவில் உள்ள முதல் வரிசையில் இருக்கும் மும்பையுடன் 2 தடவையும், கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ ஆகியவற்றுடன் ஒருமுறையும் மோதும். அதன்படி 10 அணிகளும் தலா 14 ஆட்டத்தில் விளையாடும்.

லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

மே 22 -ந் தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. பிளே ஆப் சுற்று ஆட்ட விவரங்கள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இறுதிப்போட்டி மே 29 ந் தேதி நடைபெறும்.

மும்பை வான்கடே மைதானத்தில் நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

58 நாட்கள் லீக் ஆட்டம் நடைபெறும். இதில் 12 நாட்களில் மட்டும் 2 ஆட்டங்கள் நடக்கிறது. மற்ற தினங்களில் ஒரே ஒரு போட்டி நடைபெறும்.

கடந்த ஐ.பி.எல். சீசனிலும் கொரோனா பாதிப்பு காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. தற்போது 25 சதவீத ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த ஐ.பி.எல்.லில் போட்டியிலும் சிறப்பாக விளையாடி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பெங்களூர், பஞ்சாப், டெல்லி அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன. 2 புதிய அணிகளும் சவால் விடும் வகையில் விளையாடும். ஐ.பி.எல். போட்டி விண்மீன் விளையாட்டு டெலிவி‌ஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

[embedded content]

Source: Maalaimalar

More from விளையாட்டுMore posts in விளையாட்டு »