கரூரில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரரின் வீடுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
கரூர்:
முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக டிடிவி தினகரன் அணிக்கு தாவி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். அக்கட்சியின் மாநில, மாவட்ட பொறுப்புகளில் இருந்த அவர், டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். திமுகவில் அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.
இந்நிலையில், செந்தில் பாலாஜியின் இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை நடத்தினர்.
கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது வீட்டில் செந்தில் பாலாஜி இல்லை. அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் பலர் அங்கு திரண்டனர். செந்தில் பாலாஜியின் சகோதரர் வீட்டிலும் சோதனை நடந்தது.
செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராகபோது, வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக புகார் உள்ளது. இது தொடர்பாக, இப்போது போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
செந்தில் பாலாஜி அ.தி.மு.க.வில் இருந்தபோது 2011-15 காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar