கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு இன்று பிரகடனம் செய்துள்ளது.
ஜெனிவா:
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி அனைவரும் அறிந்ததே. சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தி உயிரிழக்கச் செய்யும் இந்த வைரஸ் சீனாவின் வுகான் நகரில் இருந்து முதலில் பரவியது. உலகம் முழுவதும் மொத்தம் 18 நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த கொரோனாவால், சீனாவில் மட்டும் இதுவரை 213 பேர் பலியாகியுள்ளனர். 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய கண்டத்தில் உருவான இந்த வைரஸ் நோய், ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா கண்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் சீனாவிற்கான விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. இந்த வைரஸ் நோய் பரவாமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவியாக அளிக்க வேண்டிய சிகிச்சைகள் பற்றியும் உலக சுகாதார அமைப்பு இரு வாரங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் குறித்து விவாதிக்க சர்வதேச சுகாதார ஒழுங்குமுறைகள் அவசர குழு கூட்டம் உலக சுகாதார அமைப்பு சார்பில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக மருத்துவ வல்லுநர்களுடன் முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
கொரோனா வைரஸ் தாக்குதலினால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு இன்று பிரகடனப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலகின் அனைத்து நாடுகளும் இந்த வைரஸ் நோய்க்கான மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கூறப்படுகிறது.
Related Tags :
Source: Maalaimalar