பாகிஸ்தான் நாட்டில் இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத்:
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது இந்தியா, ஈரான், இத்தாலி என உலகின் பல்வேறு நாடுகளுக்கும் வேகமாக பரவிவருகிறது.
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் மட்டும் 2 ஆயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 78 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த மாணவர்கள் சிலர் சீனாவின் வுகான் நகரில் கல்வி பயின்று வந்தனர். அவர்களை கொரோனா பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து சொந்தநாட்டிற்கு அழைத்துவரவேண்டும் என அந்நாட்டு மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஆனால், பாகிஸ்தான் அரசோ மாணவர்களை சீனாவில் இருந்து அழைத்து வந்தால் நாடு முழுவதும் கொரோனா பரவிவிடும் என அஞ்சி அத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் கடத்திவருகின்றனர்.
இந்நிலையில், ஈரானில் சொந்த நாடு திரும்பிய பாகிஸ்தானியர்கள் இருவருக்கு கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறையில் பிரதமருக்கு சிறப்பு ஆலோசனைகள் வழங்கும் அதிகாரி டாக்டர் சபர் மிர்சா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் மக்கள் அச்சப்பட வேண்டாம் எனவும் அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar