கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த டெல்லியில் ரேஷன் கடைகளில் முகக்கவசம் மற்றும் சானிடைசர் விற்க திட்டமிட்டுள்ளதாக மாநில உணவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் டெல்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்மட்ட குழு கூட்டம் மாநில உணவுத்துறை மந்திரி இம்ரான் உசேன் தலைமையில் நடந்தது.
இதில் மருந்துகடைகளில் தரமான முகக்கவசம், சானிடைசர் திரவம், கையுறை, சோப் போன்றவற்றை விற்பனை செய்கிறார்களா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், இந்த பொருட்களை அதிக விலைக்கு விற்பவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்ட விதிகளின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு இம்ரான் உசேன் உத்தரவிட்டார். மேலும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதை தடுக்கும் வகையில், ரேஷன் கடைகளில் இந்த பொருட்களை நியாயமான விலையில் விற்கவும் இந்த கூட்டத்தில் திட்டமிடப்பட்டது.
Related Tags :
Source: Maalaimalar