கொரோனா பரவல் காரணமாக தயாரிப்பாளர் சங்க தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளன. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என்று டி.சிவா தலைமையிலான அணியில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் தேர்தல் அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- “தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஜூன் 30-ந்தேதிக்குள் தேர்தல் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கி பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரதமர் 60 வயது கடந்தவர்கள் 2 வார காலத்துக்கு வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறியுள்ளார்.
எங்களது சங்க உறுப்பினர்கள் பலர் 60 வயதை கடந்தவர்கள். அவர்களால் தற்போது சங்கத்துக்கு வரமுடியாத நிலை உள்ளது. எனவே கொரோனா அச்சுறுத்தல் நீங்கிய பிறகு தேர்தல் வேலைகளை தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
Source: Malai Malar