அகாடமியில் 30 வீரர்கள் தங்கும் அளவில் உள்ள வளாகத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்க தயாராக இருக்கிறோம் என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இந்தி்யாவில் நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின்பேரின் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வரும் இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதுச்சேரியில் சிகிச்சை அளிக்க போதுமான இட வசதி இல்லை என்றால் எங்கள் அகாடமியில் உள்ள 30 பேர் தங்கும் அளவிற்கு உள்ள வளாகத்தை சிகிச்சை பெறுவதற்காக வழங்க தயாராக இருக்கிறோம் என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது,
‘‘புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான அகாடமி துதிபேட்டில் உள்ளது. இந்த அகாடமியின் உள்ளே இரண்டு அணிகளைச் சேர்ந்த 30 வீரர்கள் தங்கும் அளவில் சமையல் மற்றும் சாப்பாடு அறை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள வளாகம் உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தியுள்ளோம்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களில் 30 பேருக்கு இங்கு வைத்து மருத்துவம் பார்க்க முடியும். லட்சுமி மெடிக்கல் காலெஜ் உடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் தேவைப்பட்டால் எங்களை அணுகலாம்”என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Source: Maalaimalar