Press "Enter" to skip to content

கொரோனா பாதிப்பில் சீனாவை விஞ்சும் இந்தியா- இதுவரை 81970 பேருக்கு நோய்த்தொற்று

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி உள்ள நிலையில், 2649 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம், பரிசோதனைகளை அதிகரிக்க அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து  உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. மொத்தம் 81970 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3967 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2649 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 29920 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். 

கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா நாளை விஞ்சிவிடும். கொரோனா வைரஸ் வெளிப்பட்டசீனாவில் இதுவரை 82933 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4633 பேர் உயிரிழந்துள்ளனர். 78209 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். கடந்த சில தினங்களாக புதிய பாதிப்பு ஒற்றை இலக்கத்திலேயே உள்ளது. இன்றைய நிலவரப்படி 91 பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 27524 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1019 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இதுவரை 9591 பேருக்கும், தமிழகத்தில் 9676 பேருக்கும், டெல்லியில் 8470 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 4426 பேருக்கும், ராஜஸ்தானில் 4536 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 3902 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »