மத்திய நிதி மந்திரி அறிவித்துள்ள நடவடிக்கைகளும், சீர்திருத்தங்களும் சுகாதாரம், கல்வித் துறைகளில் மாற்றத்தை உருவாக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 12-ம் தேதி இரவு நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது, பொருளாதாரத்தை மீட்கும் வகையில் 20 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். இந்த நிதியில் இருந்து சிறு, குறு நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும், அனைத்துத் தரப்பினரின் நலனுக்காகவும் சிறப்பு திட்டங்கள் அமல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய்க்கான திட்டங்கள் எவை என்பது குறித்த விரிவான விவரங்களை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாக வெளியிட்டார். அதன்படி, ஐந்தாவது நாளாக செய்தியாளர்களுக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நடவடிக்கைகளும், சீர்திருத்தங்களும் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் மாற்றத்தை உருவாக்கும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், நிதி மந்திரியின் சீர்திருத்தங்கள், தொழில் முனைவை ஊக்கப்படுத்தும். பொதுத் துறைக்கு உதவிடுவதோடு மட்டுமன்றி, கிராம பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்யும். இதன்மூலம் மாநிலங்களின் சீர்திருத்தப் பாதைகளுக்கு உத்வேகம் கிடைக்கும் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar