சமூக வலைதளத்தில் ஆபாசமாக கமெண்ட் செய்த நெட்டிசன்களை பிரபல மலையாள நடிகை அபர்ணா நாயர் கடுமையாக சாடியுள்ளார்.
தமிழில் ‘எதுவும் நடக்கும்‘ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அபர்ணா நாயர். மலையாளத்தில், ரன் பேபி ரன், கல்கி, மல்லுசிங், ஹோட்டல் கலிபோர்னியா உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முகநூல் பக்கத்தில் அபர்ணா நாயர் தனது புகைப்படங்களையும் கருத்துகளையும் அடிக்கடி பகிர்ந்து வந்தார்.
இந்த நிலையில் ஒருவர் அபர்ணா நாயரை ஆபாசமாகவும் மோசமாகவும் சித்தரித்து வலைத்தளத்தில் கருத்து பதிவிட்டார். இது அபர்ணா நாயருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. தன்னை கொச்சைப்படுத்திய நபரின் பெயரையும் முகநூல் பக்கத்தையும் குறிப்பிட்டு வலைத்தளத்தில் கண்டித்தார்.
அவர் கூறியதாவது: “என் மீது அக்கறை கொண்டவர்களுடன் கலந்துரையாடுவதற்காக சமூக வலைத்தள பக்கத்தை பயன்படுத்துகிறேன். இது உன்னை போன்றவர்களின் பாலியல் ஆசைகளை தீர்த்துக்கொள்ளும் தளம் அல்ல. உங்கள் வக்கிரமான ஆசைகளை நான் தீர்த்து வைப்பேன் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இதுபோல் ஆபாசமான கருத்துகளை பதிவிடுவதற்கு முன்னால் உங்களுக்கு ஒரு மகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை நினைத்து பாருங்கள். உங்களுக்கு 30 வினாடி சந்தோஷத்தை கொடுப்பதற்காக நான் இங்கு இல்லை.” இவ்வாறு கூறியுள்ளார்.
Source: Malai Malar