பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:
உலகையே அச்சுறுத்தி பலரை பலி வாங்கி வரும் கொரோனா பாகிஸ்தானில் தற்போது வேகமாக பரவி வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் அதிகபட்சமாக 6,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,25,933 ஆக உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானில் கொரோனாவால் ஒரே நாளில் 107 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு இதுவரை மொத்தம் 2,463 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர். வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை 40,247 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் பாகிஸ்தான் 15-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லை எனவும், என் உடல் மோசமாக வலியை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தான் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக தனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரைவஸ் தொற்றிலிருந்து விரைவில் மீண்டு வர பிரார்த்தனை தேவை. இன்ஷா அல்லாஹ் எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூன்றாவது பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar