பீகார் மற்றும் உ.பி.,யில் மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த இடியுடன் கூடிய மழைக்கு 83 பேர் பலியாகி உள்ளனர் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
கனமழையால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார், அவர்களது குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதேபோல், உத்தர பிரதேசம் மாநிலத்திலும் பலர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், பீகார் மற்றும் உ.பி.யில் பெய்த கனமழையாலும், மின்னல் தாக்கியும் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பீகார் மற்றும் உ.பி.,யின் சில மாவட்டங்களில் பெய்த கனமழை மற்றும் மின்னல் தாக்குதலில் சிக்கி பலர் உயிரிழந்த சோகமான செய்தி வந்துள்ளது. மாநில அரசுகள் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளன. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Source: Maalaimalar