நடிகர் சுஷாந்த் சிங், இறப்பதற்கு முன் கூகுளில் வலியில்லா மரணத்திற்கு வழி தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் கடந்த ஜூன் மாதம், தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் காதலி ரியா, தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன் தனது பெயரை, கூகுளில் தேடி அது குறித்த கட்டுரைகளை படித்தாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்தும் படித்ததாக மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது மேலாளர் திஷா சாலியன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது பெயரையும், சுஷாந்த் கூகுளில் தேடியதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தான் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு வலியில்லாமல் தற்கொலை செய்வது எப்படி என அவர் கூகுளில் தேடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங், பைபோலார் டிஸார்டர் எனும் மன அழுத்த நோய்க்கு, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர். சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து அவரது காதலி ரியா, ரூ.15 கோடி பண பறிமாற்றம் செய்ததாக கூறிய புகார் முற்றிலும் தவறு என்றும், மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
Source: Malai Malar