நிவர் அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்கும்போது 120 முதல் 145 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான ஆழந்த் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிவர் புயலாக மாறியுள்ளது. நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலமாக மாறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தீவிர புயலமாக மாறும் நிவர் அதிதீவிர புயலாக கரையை கடக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் புதுவையில் இருந்து 380 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 410 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
புயல் கரையை கடக்கும்போது 120 கி.மீட்டர் முதல் 145 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரித்துள்ளது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிஅடைமழை (கனமழை) பெய்யும்.
கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். புயல் காரணமாக வரும் 27-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியில் இன்று நிவர் புயல் காரணமாக பெரும் அடைமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar