விமல் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நடிகர் விமல் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கன்னிராசி’. கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தின் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமை ‘ஊடகம் டைம்ஸ்’ நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது.
இதற்காக படத்தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு 17 லட்சம் ரூபாயை ஊடகம் டைம்ஸ் நிறுவனர் அல்டாப் ஹமீது வழங்கியுள்ளார். ஆனால், ஒப்பந்தத்தின்போது உறுதி அளித்ததைப் போல 2018-ம் ஆண்டுக்குள் படத்தைத் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிம் வெளியிடவில்லை.
இந்நிலையில், ‘கன்னிராசி’ திரைப்படம் இன்று (27/11/2020) வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தது. ஆனால், படத்தை வெளியிடும் உரிமையை ஊடகம் டைம்ஸுக்கு அளிக்கவில்லை. வேறு நிறுவனம் மூலமாக வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரிக்கான விநியோக உரிமைக்காக தன்னிடம் 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு வேறு நிறுவனம் மூலமாகப் படம் வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும், தன்னிடம் பெறப்பட்ட தொகைக்கு வட்டியுடன் சேர்த்து 21 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் ‘ஊடகம் டைம்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ‘கன்னிராசி’ திரைப்படம் வெளியாக இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், இந்த மனு தொடர்பாக டிசம்பர் 7-ம் தேதிக்குள் பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ஷமீன் இப்ராஹிமுக்கு உத்தரவிட்டார்.
[embedded content]
Source: Malai Malar