‘நிவர்’ புயல் பாதிப்புகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திரமோடி தொலைபேசி மூலம் கேட்டறிந்தார். தேவையான உதவிகளை செய்வதாகவும் அப்போது உறுதி அளித்தார்.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திய ‘நிவர்’ புயல் நேற்று முன்தினம் அதிகாலை கரையை கடந்தது. கோர தாண்டவம் ஆடிய ‘நிவர்’ புயல், கடலூர், மரக்காணம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் பாதித்த இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே கடலூர் மாவட்டத்தில் சேதம் ஏற்பட்ட பகுதிகளில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டு திரும்பியிருக்கிறார்.
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 9 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எடப்பாடி பழனிசாமியிடம், மோடி விரிவாக கேட்டறிந்தார். மேலும், மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்தும் கேட்டார்.
பின்னர், தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்வதாகவும் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தார்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar