13 ஆண்டுகளுக்கு பின் படம் இயக்கும் பிரபல இயக்குனர், அப்படத்தில் நகைச்சுவை நடிகர் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளாராம்.
மெட்டி ஒலி தொடர் மூலம் பிரபலமானவர் இயக்குனர் திருமுருகன். இவர் பரத், கோபிகா மற்றும் நாசர் நடிப்பில் உருவான எம் மகன் படம் மூலம் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். அந்த படம் குடும்பங்கள் கொண்டாடிய வெற்றிப் படமாக அமைந்தது.
இதையடுத்து மீண்டும் பரத்தை வைத்து முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற படத்தை 2008-ம் ஆண்டு இயக்கினார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி நாதஸ்வரம் உள்ளிட்ட தொடர்களை இயக்கினார்.
இந்நிலையில், இயக்குனர் திருமுருகன் தற்போது மீண்டும் படம் இயக்க தயாராகி வருகிறார். இப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. திருமுருகன் இயக்கிய இரண்டு படங்களிலும் வடிவேலுவின் நகைச்சுவை பெரிதும் வரவேற்பை பெற்றது.
இதனால் தற்போது இயக்க உள்ள புதிய படத்திலும் வடிவேலுவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். குடும்பங்கள் கொண்டாடும் படமாக உருவாக உள்ள இதை, சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
[embedded content]
Source: Malai Malar