விக்ரம் வேதா படத்தின் இந்தி மறுதயாரிப்புகில் இருந்து நடிகர் அமீர் கான் விலகியதற்கான உண்மைக் காரணம் வெளியாகி உள்ளது.
மாதவன், விஜய் சேதுபதி நடிப்பில் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் 2017-ல் வெளிவந்த படம், ‘விக்ரம் வேதா’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பாலிவுட்டில் இப்படம் மறுதயாரிப்பு ஆக இருக்கிறது. மாதவனாக சயீப் அலிகானும், விஜய் சேதுபதியாக அமீர் கானும் நடிப்பதாக செய்திகள் வெளியானது.
பின்னர் அமீர் கான் இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிக்க ஒப்பந்தமானார். இருப்பினும் அமீர் கான் விலகியதற்கான காரணம் வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில், அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது. இந்தப்படத்தை பான் ஆசியா படமாக உருவாக்க நினைத்த அமீர் கான், இதன் கதையை அப்படியே ஹாங்காங் பின்னணியில் நடைபெறுவதாக மாற்ற சொன்னாராம். அதற்காக திரைக்கதையும் மாற்றி எழுதப்பட்டது.
ஆனால் கொரோனா தாக்கம், மற்றும் இந்தியா – சீனா இடையேயான பிரச்சனை என இரண்டும் சேர்ந்து அமீர் கானின் திட்டத்தை தவிடுபொடியாக்கி விட்டதாம்.
ஏற்கனவே அமீர் கானின் தங்கல் படம் சீன மொழியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால், விக்ரம் வேதாவையும் அதே பாணியில் உருவாக்க நினைத்திருந்த அமீர் கான், அதற்கு வாய்ப்பில்லை என தெரிந்ததுமே இப்படத்தில் இருந்து விலகிக் கொண்டாராம்.
[embedded content]
Source: Malai Malar