Press "Enter" to skip to content

திட்டமிட்டு புதிய கல்விக்கொள்கையின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

புதிய கல்விக் கொள்கையின் உள்ளடக்கம் தமிழர்களுக்கு தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள் கிளம்பும் என்பதால் திட்டமிட்டு மத்திய அரசு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் மாநில மொழிகளை படிப்படியாக, முற்று முழுதாக ஒழித்துக்கட்டுவதே, புதிய கல்விக்கொள்கையின் முதன்மை நோக்கம் ஆகும். இந்தி, சமஸ்கிருத மொழிகளை, இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களும் கற்க வேண்டும்; அதற்காக ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்து, அந்த இரண்டு மொழிகளின் வளர்ச்சிக்காக, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை ஒதுக்கியிருக்கின்றனர்.

தமிழ்நாட்டுப் பள்ளிகளிலும் இந்தி, சமஸ்கிருதத்தைப் படித்தாக வேண்டும் என்ற புதிய கல்விக் கொள்கை, தமிழுக்கு, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்கு எதிரானது என்பதால், அதைத் தமிழகம் முற்று முழுதாக ஒதுக்கித்தள்ள வேண்டும் என்பதை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. திராவிட இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.

அந்த புதிய கல்விக்கொள்கையை முதலில், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வெளியிட்டனர். தற்போது குஜராத்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட 17 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்றனர். நேபாளி மொழிபெயர்ப் பும் வெளியாகி இருக்கின்றது. ஆனால், தமிழில் வெளியிடவில்லை. காரணம், அந்தக் கல்விக் கொள்கையின் உள்ளடக்கம் தமிழர்களுக்குத் தெரியக்கூடாது; தெரிந்தால் எதிர்ப்புகள் கிளம்பும்; அந்த எதிர்ப்பு இந்தியா முழுமையும் பரவும் என்ற நோக்கத்துடன், திட்டமிட்டு தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிடவில்லை.

தமிழ் மொழியின் சிறப்பு, பெருமை என மேடைகளில் முழங்கும் நரேந்திரமோடி அரசின் உள்நோக்கம், வெளிப்பட்டுவிட்டது. இந்தியாவில் ஏழரைக் கோடி மக்கள் பேசும், கால வரையறை வகுக்க முடியாத செம்மொழியாம் தமிழைப் புறக்கணித்த மோடி தலைமையிலான அரசுக்கு கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

[embedded content]

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »