மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை:
கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் மீன் விற்பனை வளாகங்கள் மற்றும் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி காசிமேடு மீன் சந்தை, சிந்தாதிரிப்பேட்டை மீன் அங்காடி வளாகம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகளை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாமல் அனைவரும் பின்பற்ற வேண்டும்.
பின்பற்ற தவறும் வியாபாரிகள் மீன் விற்பனை செய்வது தடை செய்யப்படும்.
மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் 12 ஆயிரத்து 52 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது கலாநிதி வீராசாமி எம்.பி., எபிநேசர் எம்.எல்.ஏ., கூடுதல் காவல் துறை கமிஷனர் செந்தில்குமார், மீன்வளத்துறை கூடுதல் ஆணையர் சஜ்ஜன்சிங், ஆர்.சவான் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar