டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் இங்கிலாந்து டி20 கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இலங்கை கிரிக்கெட் அணி 2009-ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடும்போது, பயங்கரவாதிகள் வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட விரும்பவில்லை.
மீண்டும் பாகிஸ்தான் மண்ணில் கிரிக்கெட்டை கொண்டுவர, அந்நாட்டு கிரிக்கெட் போர்டு எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இறுதியாக பாகிஸ்தானில் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்பதை நிரூபிக்க பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடத்தியது.
அதன்பின் தென்ஆப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாடின. கடந்த வருடம் கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தது.
இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு பாதுகாப்பு வளையத்தை உருவாக்கி ஜூலையில் இருந்து கிரிக்கெட் போட்டியை நடத்த ஆரம்பித்தது. அப்போது பாகிஸ்தான் வீரர்கள் உயிரை பணயம் வைத்து இங்கிலாந்து சென்று விளையாடினார்கள். இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் இங்கிலாந்து வந்து விளையாடுகிறோம். அதற்கு கைமாறாக எங்கள் நாட்டில் வந்து இங்கிலாந்து அணி விளையாட வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கோரிக்கை வைத்தது. அதன் கோரிக்கையை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு ஏற்றுக்கொண்டது.
இங்கிலாந்து பெண்கள் அணி அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடுகிறது. அப்போது இங்கிலாந்து ஆண்கள் டி20 அணியும் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் அக்டோபர் 13-ந்தேதி மற்றும் 14-ந்தேதிகளில் நடக்கின்றன.
டி20 உலகக்கோப்பை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதற்கு முன்னோட்டமாக இருக்கும் வகையில் இங்கிலாந்து இரண்டு போட்டிகளில் விளையாடுகிறது.
Related Tags :
[embedded content]
Source: Maalaimalar