Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்): பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய துப்பறிவாளர்களை பயன்படுத்திய சிங்கப்பூர்

கரிஷ்மா வாஸ்வானி
பிபிசி செய்தியாளர், சிங்கப்பூர்

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று இருக்க வாய்ப்பிருக்கும் நபர்களை கண்டறிய துப்பறிவாளர்களின் உதவியை பயன்படுத்தியுள்ளது அந்நாடு. இதனால் கொரோனா பாதிப்பு இருக்கும் வாய்ப்பிருப்பவர்களை, வைரஸ் தொற்று பரவுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடுகிறது.

இது எப்படி சாத்தியமானது? உலகின் மற்ற நாடுகள் இந்த முறையை பின்பற்றுமா?

சீனாவின் க்வாங்ஷீ நகரத்தில் இருந்து சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கடந்த ஜனவரி மாதம், 20 சுற்றுலா பயணிகள் சிங்கப்பூர் வந்தடைந்தனர். புகழ்பெற்ற சுற்றுலா தளங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

அதோடு முதலை எண்ணெய் மற்றும் மூலிகை பொருட்கள் போன்ற பொருட்களை விற்கும் பாரம்பரிய சீன மருந்தகம் ஒன்றுக்கும் அவர்கள் சென்றிருக்கிறார்கள். சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடையே மிகவும் புகழ்பெற்ற கடை அது.

அப்போது அந்தக் கடையில் இருந்த பணியாளர் பெண்ணொருவர் இந்த சுற்றுலா பயணிகளுக்கு பல பொருட்களை காண்பித்துள்ளார். மேலும், சில நபர்களுடைய தோல்களில் எண்ணைய் மசாஜும் செய்துள்ளார். அந்த சீன சுற்றுலாக்குழு, மீண்டும் நாடு திரும்பிவிட்டது.

ஆனால், அவர்கள் இந்த கொரோனா வைரஸ் தொற்றை சிங்கப்பூரில் விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

என்ன ஆனது?

அந்த நேரத்தில்தான், சிங்கப்பூர் விமான நிலையத்தில் சீனாவில் இருந்துவந்த சில நபர்களில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் பிப்ரவரி 4ஆம் தேதி, சிங்கப்பூர் நகரங்களுக்கு உள்ளும் இந்த வைரஸ் தொற்று பரவியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்தது.

யோங் தாய் ஹங் என்ற சீன மருந்துக்கடைதான் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்த முதல் தொகுப்பு. இதில் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டியும், அந்த மருந்துக்கடை பணியாளரும் அடங்குவர்.

சீனா சுற்றுலாவாசிகள் ஒரே ஒரு முறை அந்த கடைக்கு செல்ல, அங்கிருந்த 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மருந்துக்கடை பணியாளர், அவரின் கணவர், அவர்களது ஆறு மாத குழந்தை, அங்கிருந்த இந்தோனீசியாவை சேர்ந்த உதவியாளர் மற்றும் மேலும் இரண்டு பணியாளர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் குணமாகிவிட்டனர்.

வைரஸ் தொற்று இருப்பவர்களை வேகமாக கண்டறிய விரிவான திட்டம் ஒன்றை சிங்கப்பூர் கையாண்டிருக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகி இருக்கும்.

வைரஸ் தொற்று இருப்பவர்களை கண்டறிந்த, அந்த நபரால் யாருக்கெல்லாம் வைரஸ் தொற்று பரவியிருக்க வாய்ப்பிருக்கிறதோ அந்த நபர்களை பின்தொடர்ந்து, அவர்களையும் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களையும் தனிமைப்படுத்தியதே அத்திட்டம். இதனால் வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

“சிங்கப்பூரும் வுஹான் மாதிரி ஆகியிருக்கும். மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள் இருந்திருப்பார்கள்” என்கிறார் அந்நாட்டு அரசு ஆலோசகரும், மவுண்ட் எலிசபெத் நொவேனா மருத்துவமனையின் தொற்று நோய்க்கான சிறப்பு மருத்துவரான லியாங் ஹோ நம்.

மார்ச் 16ஆம் தேதிவரை சிங்கப்பூரில் 243 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதுவரை எந்த மரணங்களும் இல்லை.

சிசிடிவி கேமிராக்கள், போலீஸ் விசாரணை, சற்று பழைய முறையான துப்பறிவாளர்கள் உதவியுடன் கொரோனா தொற்று இருக்க வாய்ப்பிருக்கும் மொத்தம் 6000 பேர் கண்டறியப்பட்டனர்.

துப்பறிவாளர்கள் இதில் எப்படி உதவினார்கள்?

தொலைப்பேசி அழைப்புதான் இதற்கான முதல் அடி.

ஒரு நாள் சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட பிரிட்டனை சேர்ந்த யோகா பயிற்சியாளர் மெலிசாவிற்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருக்கும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது.

“என்னால் நம்பமுடியவில்லை. புதன்கிழமையன்று 18:47 மணிக்கு டாக்ஸியில் இருந்தீர்களா என்று கேட்டார்கள். சரியாக சொன்னார்கள். நான் பயந்துவிட்டேன் என்று நினைக்கிறேன். என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை” என யாரென்று தெரியாத நபரிடம் இருந்து வந்த தொலைப்பேசி அழைப்பு குறித்து விவரிக்கிறார் மெலிசா.

தான் டாக்ஸியில் பயணித்தது மெலிசாவிற்கு நியாபகம் வந்தது. ஆனால், இன்று வரை அவருக்கு கொரோனாவை பரப்பியது அந்த டாக்ஸியின் ஓட்டுநரா அல்லது உடன் வந்த சக பயணியா என்று தெரியவில்லை.

அவரை தொலைப்பேசியில் அழைத்து இந்த விஷயத்தை தெரிவித்தது சிங்கப்பூரின் சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஒரு அதிகாரி. மெலிசா வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அடுத்த நாளே மெலிசாவின் வீட்டிற்கு சில மாஸ்க் மற்றும் ஜாக்கெட்டுகளை அணிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் வர, அப்போதுதான் அவருக்கு இதன் முக்கியத்துவம் புரிந்தது.

“நான் வீட்டைவிட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் அதனை மீறினால் சிறை தண்டனையோடு அபராதமும் விதிக்கப்படும் என்றார்கள்” என மெலிசா கூறுகிறார்.

அதனை பின்பற்றிய மெலிசா, இரண்டு வாரங்கள் கழித்து கொரோனா அறிகுறிகள் ஏதுமின்று குணமடைந்தார்.

ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சுமார் 8000 பேர் இருக்கும் சிங்கப்பூர், இந்த உலகில் மக்கள் தொகை அடர்த்தியாக இருக்கும் நாடுகளில் ஒன்றாகும்.

வைரஸ் தொற்று வேகமாக பரவினால் அது அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதார சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே, அபாயத்தில் இருக்கும் அனைவரையும் கண்டறிந்து அவர்களை தனிமைப்படுத்துவதைவிட அந்நாட்டிற்கு வேறு வழி இருக்கவில்லை.

துப்பறிவாளர்களின் பங்கு

யார் யாருக்கெல்லாம் கொரோனா தொற்று இருக்கிறது என்பதை கண்டபிடிக்கும் முயற்சியில் இறங்கிய மூன்று நபர்களில் எட்வின் பிலிப்பும் ஒருவர்.

கொரொனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் சிங்கப்பூர் அரசு மருத்துவமனையில் இவரது குழு பணியாற்றுகிறது,

முதலில், நோயாளிகள் இந்த மருத்துவமனைக்கு வரும்போது, அவர்கள் எந்த இடத்திற்கெல்லாம் சென்றார்கள், யாருடன் இருந்தார்கள் போன்ற அனைத்து விவரங்களையும் இந்தக்குழு கேட்டறியும்.

அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால், உடனடியாக அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தக்குழு மொத்த தகவலையும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பும்.

“இந்த முதல் தகவல் இல்லாமல் எதையும் சேர்க்க முடியாது. இது ஒரு புதிர் போன்றது” என்கிறார் எட்வர்ட்.

அடுத்த கட்டமாக சுகாதார அமைச்சக பணிகளுக்கு தலைமை தாங்குகிறார் சுபைதா

தகவல்களை திரட்டுவதுதான் இவரது குழுவின் பணி.

சில நோயாளிகளின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தால், அவர்களிடம் இருந்து தகவல்களை திறட்டுவது கடினமாகிவிடும்.

அப்படிப்பட்ட சூழலில் அடுத்தக்குழு இந்த பணியில் இறங்கும்.

சிங்கப்பூர் காவல்துறையில் கிரிமினல் விசாரணைக்குழு பிரிவு அடுத்தகட்ட வேலையை செய்யும்.

“அரசாங்கமும் காவல்துறையும் நோயாளிகள் குறித்த தகவல்களை பரப்பிக் கொள்ள தினமும் தொலைப்பேசி உரையாடல்களில் ஈடுபடுவார்கள்” என்கிறார் கிரிமினல் விசாரணை பிரிவின் காவல் ஆணையர் லியன் கிம்.

நோயாளிகள் யாருக்கெல்லாம் கொரோனா தொற்றை பரப்பி இருக்கிறார்கள் என்ற தகவல்களை சேகரிக்கும் வேலையில் தினமும் 30 – 50 அதிகாரிகள் பணியாற்றுகிறார்கள். சில நேரங்களில் 100 அதிகாரிகள் வரை இந்தப்பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறுகிறார்.

காவல்துறையினர் இந்தப்பணிக்கு முதல் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் உளவுத்துறையின் உதவிகளையும் இந்த அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

சிசிடிவி கேமிராக்கள், மற்றும் தீவிர விசாரணைகள் மூலம் அடையாளம் கண்டறிய முடியாத நபர்களையும் கண்டுபிடித்தனர்.

உதாரணமாக டாக்ஸி சேவையை அதன் செயலி மூலமாக எடுத்துக்கொண்டவர்களை கண்டறிவது சுலபம். ஆனால், செயலி வழியாக இல்லாமல், பணமாக கொடுத்து டாக்ஸி பிடித்தவர்களை கண்டறிவது கடினமாகும்.

பிப்ரவரி மாத தொடக்கத்தில் மயக்கம் மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வந்த ஜூலிக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

“அதிகாரிகளிடம் இருந்து அழைப்பு வந்தபோது நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்” என்கிறார் ஜூலி.

கடந்த ஏழு நாட்களில் அவர் எங்கெல்லாம் சென்றார், என்ன செய்தார், யாரையெல்லாம் சந்தித்தார் என்ற அனைத்து விவரங்களும் அவரிடம் சேகரிக்கப்பட்டன.

ஜுலி, அந்த அதிகாரியிடம் சுமார் 3 மணி நேரங்கள் பேசியுள்ளார். இறுதியாக 50 நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் தொடர்பு கொண்ட சுகாதாரத்துறை அமைச்சகம், அந்த நபர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்தது.

இந்த 50 நபர்களில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை.

இரண்டு மாதங்கள் ஆகியும், சிங்கப்பூரில் கொரோனாவால் யாரும் இதுவரை பலியாகவில்லை.

ஆனால், சிங்கப்பூரில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமானால் இந்த திட்டத்தை அந்நாடு கைவிட வேண்டிவரும். இதற்கு அதிக செலவுகள் ஏற்படுவதோடு, அதிக ஆட்களும் தேவைப்படுவார்கள். அதோடு, ஒரு கட்டத்தில் கொரோனா வைரஸ் இந்த அதிகாரிகளை முந்திவிடும் என்பதே நிதர்சனம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »