பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்!!
தேசிய, சர்வதேச மற்றும் தமிழ்நாடு சார்ந்த இன்றைய பல முக்கிய செய்திகளை இங்கே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
முக்கிய நிகழ்வுகளும், செய்தி முன்னேற்றங்களும் இங்கே பகிரப்படும்.
ஐ.நாவின் உலக உணவு திட்டத்துக்கு அமைதிக்கான நோபல் பரிசு
பசியை போக்க பல முயற்சிகளை முன்னெடுத்த ஐ.நாவின் உலக உணவுத் திட்டம் அமைப்புக்கு 2020ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
“போர் மற்றும் சண்டைகளுக்கு பசி என்ற விஷயம் காரணமாகாமல் இருக்க இந்த அமைப்பு எடுத்த முயற்சிகள் உந்துதலாக இருந்ததாக” நார்வே நாட்டின் நோபல் பரிசு குழு தெரிவித்துள்ளது.
இதற்கான பரிசுத்தொகை 1.1 மில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
ஓஸ்லோவில் உள்ள நார்வேஜியன் நோபல் இன்ஸ்டிட்யூட்டில்தான் அமைதிக்கான நோபல் பரிசுக்கு தகுதி பெற்றவர் அக்டோபர் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இது மிகவும் “பெருமைமிக்க தருணம்” என்று ஐ.நாவின் உலக உணவு திட்டத்துக்கான செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
88 நாடுகளில் ஆண்டுக்கு 97 மில்லியன் மக்களுக்கு உலக உணவுத்திட்ட அலுவலகம் உதவி வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
“இந்த பரிசு இந்த அமைப்புக்கு வழங்கப்பட்டதை தொடர்ந்து, பசியால் உலகில் எவ்வளவு பேர் தவிக்கிறார்கள் என்பதை பலரும் உணர வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று நார்வேஜியன் நோபல் குழுயின் தலைவர் பெரிட் ரெஸ்- ஆண்டர்சன் கூறினார்.
இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசுக்காக சுமார் 107 அமைப்புகளும், 211 தனி நபர்களும் பரிந்துரைக்கப்பட்டனர்.
அதில், உலக சுகாதார அமைப்பு மற்றும் பருவநிலை மாற்றத்துக்கு எதிரான சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரெட்டா டூன்பெர்க் பெயர்கள் இடம்பிடித்திருந்தன.
கடந்த 5ஆம் தேதி மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு, 6ஆம் தேதி இயற்பியலுக்கான நோபல் பரிசு, 7ஆம் தேதி வேதியியலுக்கான நோபல் பரிசு, 8ஆம் தேதி இலக்கியத்துக்கான நோபல் பரிசு, 9ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
விருதுக்கு அறிவிக்கப்பட்டவர்களுக்கும் அமைப்புகளுக்கும் வழக்கமான நடைமுறைப்படி டிசம்பர் 10ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com