Press "Enter" to skip to content

ஹாங்காங்: ஜனநாயக ஆதரவாளர்கள் ஜிம்மி லாய், மார்டின் லீ குற்றவாளிகள் என அறிவிப்பு

பட மூலாதாரம், Getty Images

ஹாங்காங்கில் ஜனநாயகத்துக்கு ஆதரவாக போராடி வரும் முக்கியமான ஏழு பேர், இரண்டு ஆண்டுகளுக்கு முன் சட்ட விரோதமாக கூட்டம் சேர்த்ததாகவும், அதனால் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்ததாகவும் கூறி, அவர்கள் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

ஹாங்காங்கின் ஊடக ஜாம்பவானான ஜிம்மி லாய் மற்றும் அரசியல் தலைவரான மார்டின் லீ ஆகியோர் அனுமதி அளிக்கப்படாத பேரணியை நடத்தியதற்காக, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இந்த ஏழு பேருமே தாங்கள் குற்றம் செய்யவில்லை என வாதிட்டனர். ஆனால் தற்போது சிறைக்கு அனுப்பப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்கள் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், அரசியல் ரீதியில் அவர்கள் துன்புறுத்தப்படுவதை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சிறிய குழு போராட்டம் நடத்தியது.

இந்த ஏழு பேரில் சிலர், மற்ற பல வழக்குகளைச் சந்தித்து வருகின்றனர். அதில், 2019-ம் ஆண்டு போராட்டத்தைக் கட்டுப்படுத்த, சீனா அறிவித்த தேசிய பாதுகாப்புச் சட்டமும் அடக்கம்.

சீனாவின் இந்த தேசிய பாதுகாப்புச் சட்டத்தை மீறுபவர்கள் மீது, கடுமையான அபராதமும், நீண்ட கால சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

ஹாங்காங்கில் பல கட்ட ஜனநாயாகத்துக்கு ஆதரவான போராட்டங்களுக்குப் பிறகும், சீனா ஹாங்காங் மீது மென்மேலும் கடுமையான சட்ட திட்டங்களை விதித்து வருகிறது.

இடது பக்கமுள்ளவர் மார்டின் லீ

பட மூலாதாரம், EPA

இந்த வாரத்தின் தொடக்கத்தில் கூட, ஹாங்காங்கின் தேர்தல் விதிமுறைகளில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

அந்த புதிய விதிமுறைகளின்படி, பேரவை உறுப்பினர்களை முதலில் சீனாவுக்கு ஆதரவான குழு ஒன்று சரிபார்த்து தான் அனுமதி வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

அதோடு ஒட்டுமொத்த லெக்கோ எனப்படும் ஹாங்காங்கின் பேரவையில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 70-ல் இருந்து 90 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் நேரடியாக இந்த அவைக்கு தேர்வு செய்யப்படுபவர்களின் எண்னிக்கை 35-ல் இருந்து 20-ஆக குறைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்மி லாய், மார்டின் லீ உடன், மார்கரெட் எங், சைட் ஹொ சா லன், லீ சூக் யான், ஆல்பர்ட் ஹோ சன் யன், லெங் க்வாக் ஹுங் போன்றோர்களும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

பின்னணி என்ன?

1997ஆம் ஆண்டு பிரிட்டன், ஹாங்காங்கை சீனாவிடம் ஒப்படைக்கும் போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி `ஒரு நாடு, இரு ஆட்சிமுறை` என்ற கொள்கையின் கீழ் அடிப்படை சட்டங்கள் உருவாக்கப்பட்டன.

சீனாவின் முக்கிய நிலபரப்பில் இல்லாத ஹாங்காக்கின் சில உரிமைகளை (மக்கள் ஒன்று கூடும் உரிமை, மக்களின் பேச்சுரிமை, சுதந்திரமான நீதித் துறை போன்ற சில ஜனநாயக உரிமைகள்) இச்சட்டங்கள் பாதுகாக்க வேண்டும்.

ஆனால் இந்த அமைப்பே சிதைக்கப்பட்டு வந்தது. அது ஜனநாயகத்துக்கு ஆதரவான, 2019-ம் ஆண்டில் நடந்த மிகப் பெரிய போராட்டத்துக்கு வழி வகுத்ததாக கூறப்பட்டது.

சில போராட்டங்கள் வன்முறையாக வெடித்தன. 2020ஆம் ஆண்டு ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்ட மசோதாவை சீன மத்திய அரசு பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றியது. அந்த சட்டத்தின் கீழ் பிரிவினைவாதம், அரசை எதிர்ப்பது, வெளிநாட்டு சக்திகளோடு கூட்டு சேர்வது போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இக்குற்றங்களுக்கு அதிகபட்சமாக வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்படலாம்.

இந்த சட்டம் தேச விரோதிகளை மட்டுமே குறி வைக்கும். ஹாங்காங்கில் ஸ்திரத்தன்மையை அது ஏற்படுத்தும் என கூறியது சீனா. கடந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதிலிருந்து, ஜிம்மி லாய் உட்பட சுமார் 100 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »