பிரிட்டிஷ் இளவரசரும் எடின்பரோ கோமகனுமான ஃபிலிப்பின் இறுதி நிகழ்வுக்கான பிரார்த்தனை சேவைகள், புனித ஜார்ஜ் தேவாயத்தில் சனிக்கிழமை இந்திய நேரப்படி இரவு 7.30 மணி முதல் நடந்து வருகின்றன. இதில் பங்கேற்ற அரச குடும்ப உறுப்பினர்கள் துக்கம் அனுஷ்டித்து பிரார்த்தனை செய்தனர்.
புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட்ட அவரது பூத உடல், பிரார்த்தனை சேவை முடிந்ததும் வின்சர் கோட்டை உள்ளரங்கத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
முன்னதாக தொடங்கிய இறுதி நிகழ்வு ஊர்வலத்தில் இளவரசர் ஃபிலிப்பின் குடும்பத்தினர் கலந்து கொண்டுள்ளனர். கோமகனின் தனிச்செயலாளர் பிரிகேடியர் மில்லர் பேக்வெல், மெட்ரோபாலிட்டன் காவல்துறையினருடனும் அவரது இரண்டு முன்னாள் மெய்க்காப்பாளர்களுடனும் பங்கேற்றிருந்தார்.
தனது இறுதி நிகழ்வின்போது எத்தகைய பேண்டு வாத்திய குழு இருக்க வேண்டும் என இளவரசர் ஃபிலிப் விரும்பியிருந்தாரோ அந்த குழுவினர் பங்கேற்ற வாத்தியம் இசைக்கப்பட்டது. இளவரசரால் விரும்பப்பட்டு மாற்றி வடிவமைக்கப்பட்ட லேண்ட் ரோவர் காரில் அவரது பூத உடல் வைக்கப்பட, ஜெருசலேம், எல்கரின் நிம்ரோத் பேண்டு வாத்திய குழுவினர் இசை முழங்க ஊர்வலம் சென்றது.
தனது கணவரின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காக அரசி எலிசபெத், வின்சர் கோட்டியில் இருந்து பென்ட்லி ரக காரில் புறப்பட்டார்.
இளவரசரின் மறைவுச் செய்தியை அறிவித்த பிறகு தற்போதுதான் அவர் கோட்டையை விட்டு வெளியே வருகிறார். அப்போது பேண்டு வாத்திய குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர்.
இளவரசர் ஃபிலிப்பின் மூத்த பிள்ளைகள், வேல்ஸ் இளவரசர் மற்றும் ராயல் இளவரசி இறுதி ஊர்வலத்தில் முன்னின்று நடக்க, உடன் பிறந்தவர்களான வெஸ்ஸெக்ஸ் மற்றும் யார்க் கோமகன் பின்தொடர்ந்து சென்றனர்.
மூன்றாவது வரிசையில் சஸ்ஸெக்ஸ் கோமகன், கேம்ப்ரிட்ஜ் கோமகனும் அவர்களுக்கு இடையே பீட்டர் ஃபிலிப்ஸும் சென்றார்.
இதையடுத்து தேவாலயத்தை பூத உடல் அடைந்ததும், இளவரசரின் உடல் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டதும் இடப்பக்கமாக அது கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை அரசி தேவாலயத்தை அடைந்ததும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பிறகு கென்டர்புரி பேராயர் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.
பின்னர் பிரார்த்தனை சேவைக்காக தேவாலயத்துக்குள் இளவரசரின் பூத உடல் அடங்கிய சவப்பெட்டி கொண்டு செல்லப்பட்டது.
அங்கு தேவாலயத்துக்குள் பிரார்த்தனை சேவையை பேராயர் வழிநடத்தினார்.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைப்படி தேவாலயத்துக்குள் பிரார்த்தனை சேவை நடக்கும்போது அரசி எலிசபெத் தனிமையில் அமர்ந்திருந்தார். அவருக்கு இரண்டு இருக்கைகள் இடைவெளி விட்டு யார்க் கோமகன் இருந்தார்.
தேவாலயத்துக்குள் இருந்த மதகுருமார்கள் உள்ளிட்டோர் பிரார்த்தனையில் ஈடுபட்டார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com