Press "Enter" to skip to content

இஸ்ரேல் மத திருவிழா நெரிசலில் சிக்கி 45 பேர் பலி – அதிர்ச்சியில் தலைவர்கள்

பட மூலாதாரம், AFP

இஸ்ரேல் நாட்டின் மெரோன் நகரில் உள்ள ரப்பி ஷிமான் பர் யோசாய் கல்லறையில் லேக் பி ஒமெர் ஆண்டுத் திருவிழாவில் பங்கேற்க வந்த யாத்ரீகர்கள் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கியதில் சுமார் 45 பேர் பலியானார்கள். அந்த சம்பவம் குறித்த விசாரணைக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு உத்தரவிட்டுள்ளார்.

இஸ்ரேலில் உள்ளூர் நேரப்படி இந்த சம்பவம் வியாழக்கிழமை நள்ளிரவைக் கடந்த ஒரு மணியளவில் நடந்துள்ளது. சம்பவ பகுதியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு வெள்ளிக்கிழமை பார்வையிட்டு, இத்தகைய பேரிடர் இனி நடக்காதவாறு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

சம்பவ பகுதியில் மனதை உருக்கும் வகையிலான காட்சிகளை பார்த்தேன். சிறு குழந்தைகள் உள்பட பலரும் நசுங்கி உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேல் பிரதமர் கூறினார்.

இஸ்ரேல் சம்பவம்

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேல் வரலாற்றிலேயே இது மிகவும் மோசமான சம்பவம் என்றும் உயிரிழந்தவர்களின் நினைவாக வரும் ஞாயிற்றுக்கிழமை துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.

நடந்த சம்பவத்தில் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையே, பலியானவர்களின் இறுதிச்சடங்குகள் அதே நகரில் நடந்தன. உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க இறுதி நிகழ்வுகளில் பங்கெடுத்தனர்.

இஸ்ரேல் சம்பவம்

பட மூலாதாரம், AFP

சம்பவம் எவ்வாறு நடந்திருக்கலாம்?

உள்ளூர் நேரப்படி நள்ளிரவைக் கடந்த ஒரு மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்போது பழங்கால கல்லறை அமைந்த பகுதியும் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது.

ஆனால், ஹாரெட்ஸ் நாளிதழிடம் பேசிய காவல்துறையினர், படிக்கட்டு பகுதியில் பலரும் கால் தடுக்கி சரிந்ததையடுத்து ஏராளமானோர் சரிய நேரிட்டது என்று கூறினர். ஆனால், இந்த தகவலை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை.

குறுகலான பாதையில் மக்கள் கூட்ட நெரிசலுக்கு இடையே வருவதை இணையத்தில் பகிரப்பட்ட பல்வேறு காணொளிகள் காண்பித்தன.

நடந்த சம்பவத்துக்கான ஒட்டுமொத்த பொறுப்பை தாமே ஏற்றுக் கொள்வதாக உள்ளூர் காவல் தலைமை அதிகாரி ஷிமோன் லெவி தெரிவித்தார். பயங்கரமான அந்த இரவில் தங்களால் இயன்ற அனைத்தையும் தமது காவலர்கள் செய்தனர் என்று அவர் ஏஎஃப்பி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த அந்த இடத்தில் நகருவதற்கு கூட இடமின்றி மக்கள் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“திடீரென துணை மருத்துவ ஊழியர்கள் அங்குமிங்குமாக ஓடினார்கள்,” என்று கூறிய ஷ்லோமோ, பிறகு ஒன்றன் பின் ஒன்றாக சடலங்களை வெளியே கொண்ட வந்தபோதுதான் அங்கு ஏதோ மோசமாக நடந்துள்ளது என்பதை அறிந்தோம் என்று கூறினார்.

பெருந்தொற்றுக்கு மத்தியில் திருவிழா

இஸ்ரேல் சம்பவம்

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேலில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பூசி திட்டத்தின் பயனாக அங்கு அமலில் இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் சமீபத்தில் தளர்த்தப்பட்டன.

இந்த நிலையில், அங்கு வாழும் யூதர்களால் புனித ஆன்மிக திருவிழாவாக நம்பப்படும் மெரோன் நகரில் உள்ள இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவியான ரப்பி ஷிமோன் பர் யோச்சாய் கல்லறை ஆண்டு விழாவில் பங்கேற்க லட்சக்கணக்கானோர் சென்றுள்ளனர்.

இந்த புனிதத் தலம் பெரும்பாலும் ஆண்கள், பெண்களுக்கான தனி வழியை கொண்டதாக இருக்கும்.

டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியின்படி, முந்தைய ஆண்டை விட இந்த ஆண்டு மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகளுடன் நடந்த திருவிழாவில் விழா ஏற்பாட்டாளர்கள் மதிப்பிட்ட ஒரு லட்சம் எண்ணிக்கையை விட கூட்டம் வியாழக்கிழமை அதிகமாக இருந்தது. இந்த கூட்டம் மறுநாளான வெள்ளிக்கிழமை அதிகரிக்கும் நிலை உருவானது.

மத்திய கிழக்கு பிபிசி செய்தியாளர் டாம் பேட்மென் என்ன கூறுகிறார்?

இஸ்ரேல் சம்பவம்

சம்பவ பகுதியில் ஆண்கள் டஜன் கணக்கில் வந்தனர். மற்றவர்கள் குழு, குழுவாக இருந்த வேளையில், வாக்குவாதம் ஏற்பட்ட பிறகு திடீரென ஏற்பட்ட நெரிசலுக்குப் பிறகு அந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

கூட்டம் சரிந்த பகுதியின் மேல் பகுதியில் இருந்து நான் வளைவாக இருந்த படிகளற்ற உலோகத்தால் ஆன மேடையில் நான் நடந்து சென்றேன். அந்த உடம் வழுவழுப்பாகவும் ஈரமாகவும் இருந்தது.

பின்னர் குறுகிய பாதை வலதுபுறமாக திரும்பிய இடத்தில் இருந்த படிக்கட்டுகள் செங்குத்தாக இருந்தன. அதை காண்பித்த நபர், “காவல்துறையினர் அங்கு தடுப்புகளை வைத்தார்கள்!” என்று கோபத்துடன் பேசினார்.

மேலே உள்ள கூட்டத்தைக் கடந்து செல்ல முடியாதவர்களாக என்ன செய்வதென்றே தெரியாமல் பலரும் இருந்ததாக மக்கள் கூறினர்.

பழங்கா ரப்பியின் சன்னதியில் ஆசீர்வாதம் பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கில் யாத்ரீகர்கள் இங்கு வருகிறார்கள். இந்த ஆண்டு பீதி மற்றும் மோசமான நெரிசலில் அவர்கள் சிக்கி ஆபத்தை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இப்போது இந்த புனித தலம், திட்டமிடப்படாத, மிகப்பெரிய அளவிலான மக்கள் வெளியேற்றத்துக்கு சாட்சியாகியிருக்கிறது. தற்போது திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கில் மக்கள் பேருந்துகள் மூலமாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள் என்றார் டாம் பேட்மென்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »