Press "Enter" to skip to content

ஜெர்மனியில் பெருவெள்ளம்: குறைந்தது 42 பேர் பலி

பட மூலாதாரம், Reuters

ஜெர்மனியின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால் குறைந்தது 42 பேர் இறந்துள்ளனர். பலரைக் காணவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

ரைன்லேண்ட்-பலட்டினேதட் மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய மாநிலங்கள் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

அண்டை நாடான பெல்ஜியத்தில் 6 பேர் வெள்ளத்தில் சிக்கி இறந்துள்ளனர். அங்குள்ள லீஜ் நகரத்திலிருந்து குடியிருப்போர் வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீடுகளின் இடிபாடுகள், கார்களின் சிதைவுகள்...

பட மூலாதாரம், EPA

மேற்கு ஐரோப்பாவின் சில பகுதிகளில் பெய்த வரலாறு காணாத மழையால், பெரும்பாலான ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது.

நெதர்லாந்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாகாணமான லிம்பர்க்கில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

ரைன்லேண்ட்-பலட்டினேதட் மாநிலத்தின் தலைவர் மாலு ட்ரேயர், இந்த வெள்ளத்தை “பேரழிவு” எனக் கூறியுள்ளார்.

” பலர் இறந்துள்ளனர், காணாமல் போய் உள்ளனர். பலர் இன்னும் ஆபத்தில் உள்ளனர். எங்கள் அவரச சேவைகள் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன” என்கிறார் அவர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடனான சந்திப்புக்காக அமெரிக்காவில் உள்ள ஜெர்மனி சான்சிலர் ஏங்கலா மெர்கல், பேரழிவால் அதிர்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ரைன்லேண்ட்-பாலாடினேட்டின் அஹ்ர்வீலர் மாவட்டத்தில், அஹ்ர் நதி கரைபுரண்டோடியதால் வெள்ளத்தில் சிக்கி 19 பேர் இறந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கித்தவிக்கும் மக்களை மீட்க, காவல்துறை உலங்கூர்திகளும், நூற்றுக்கணக்கான படையினரும் அனுப்பப்பட்டுள்ளனர். மீட்கப்படுவதற்காக டஜன் கணக்கான மக்கள் வீட்டுக்கூரைகளில் காத்திருப்பதாக காவல்துறை முன்னர் தெரிவித்தது.

மேற்கு ஜெர்மனியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மலைப்பகுதியான ஈபிள் பிராந்தியத்தில் உள்ள ஷுல்ட் பீ அடெனாவ் மாவட்டத்தில் சுமார் 25 வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. சில வீடுகளுக்கான பாதை முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும் அங்கு படகில் செல்ல முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இதை யாரும் எதிர்பார்க்கவில்லை . இவ்வளவு மழை எங்கிருந்து வந்தது என்றே தெரியவில்லை என்கிறார் மாயன் பகுதியில் வசிக்கும் 65 வயதான அன்னேமரி முல்லர்.

36 வயது உள்ளூர் ஆசிரியரான ஆர்ட்ரட் மேயர், ”இது போன்ற ஒன்றைப் பார்த்ததில்லை” என்று கூறுகிறார்.

இதற்கிடையில், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா பகுதியில் புதன்கிழமையன்று இரண்டு தீயணைப்பு வீரர்கள் இறந்தனர். ஒருவர் நீரில் மூழ்கியும், மற்றவர் மீட்பு நடவடிக்கையின் போதும் இறந்ததாகக் கூறப்படுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் பாதி மூழ்கிய நிலையில் வாகனங்கள்.

பட மூலாதாரம், Reuters

ஜெர்மனி போலவே பெல்ஜியத்திலும் நிலைமை மோசமாக உள்ளது. பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்பிற்குப் பிறகு பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகர்ப்புறப் பகுதியான லீஜினில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அந்நகர மேயர் வலியுறுத்தியுள்ளார். வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்கள் தங்கள் கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பெல்ஜிய நகரமான பெபின்ஸ்டரில் 10 வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மோசமான வானிலை காரணமாக பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் தொடர் வண்டிசேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேற்கு ஐரோப்பாவின் பெரும்பகுதியில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிக மழை பெய்யக்கூடும் என்று வானிலை கணிப்புகள் தெரிவித்துள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »