அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினம். இந்த தினம் மனநலம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிக்க அனுசரிக்கப்படுகிறது.
உலக மனநல கூட்டமைப்பால் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் `சமநிலையற்ற உலகில் மனநலம்` என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் உள்ள 75% – 95% பேர் மனநலம் தொடர்பான சேவைகளை அணுகமுடிவதில்லை என இந்த கூட்டமைப்பு தெரிவிக்கிறது. இருப்பினும் வளர்ந்த நாடுகளில் உள்ளவர்களும் கூட மனநலம் தொடர்பான சேவைகள் பெறுவதில் சிரமப்படுகின்றனர்.
பல்வேறு நாடுகளை சேர்ந்த, முன்னர் நோயாளியாக இருந்தவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து கொண்டு இருந்த ஒருவர் மற்றும் மன நில மருத்துவர் ஆகியோரிடம் பிபிசி பேசியது. மனநலம் தொடர்பான சிகிச்சைகளையோ அல்லது சேவைகளையோ பெறுவதில் என்ன சிக்கல் என்பதை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
நோயாளி: `அடையாள அட்டை இல்லை என்பதால் சிகிச்சை இல்லை`
தமிழ்நாட்டின் கூடலூரை சேர்ந்தவர் திருச்செல்வி, இவருக்கு திருமணம் நடைபெற்றவுடன் அவரின் கணவர் திருச்செல்வியை துன்புறுத்த தொடங்கியுள்ளார். என்ன நடந்தது என்பதை நினைவு கூர்வதும் திருச்செல்விக்கு துயரத்தை தந்தது.
திருச்செல்விக்கு ஒரு மகன் உள்ளார். 2009ஆம் ஆண்டு திருச்செல்வி தனது கணவரின் துன்புறுத்தலால் மனநலப் பிரச்னைக்கு ஆளானார். எனவே அவரின் கணவர் திருச்செல்வியை விட்டுச் சென்றுவிட்டார்.
திருச்செல்வியும் அவரது மகனும், வீடில்லாமல், கையில் பணம் ஏதும் இல்லாமல் தவித்து நின்றனர். அவர் யார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள அவருக்கு எந்த ஆவணமும் இல்லை.
திருச்செல்வி அதீத மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு ஆதரவு வழங்க யாரும் இல்லை.
இந்தியாவில் அடையாள அட்டை இல்லையெனில் அரசின் சுகாதார சேவைகளை பெறுவதும் கடினம்.
திருச்செல்வியை பொறுத்தவரை அவருக்கு என்று ஒரு நிரந்தர விலாசமும் இல்லை எனவே அவருக்கு அடையாள அட்டை பெறுவதும் கூட சிரமமாக இருந்தது.
நாளுக்கு நாள் திருச்செல்வியின் மன நலம் மோசமடைந்தது.
“எனக்கு என்ன செய்வதென்றோ அல்லது எங்கு செல்வது என்றோ புரியவில்லை. ஒரு கட்டத்தில் நான் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன்,” என்கிறார் திருச்செல்வி.
எப்படியோ திருச்செல்வி சென்னை வந்தார். அங்கு அவர் `பான்யன்` என்ற தொண்டு அமைப்பின் கண்ணில் பட்டார்.
அந்த சமயத்தில் அந்த தொண்டு நிறுவனம் வீடில்லாதவர்கள் நலன் குறித்து பணியாற்றி கொண்டிருந்தது.
அந்த தொண்டு நிறுவனத்தின் உதவியோடு திருச்செல்வி மற்றும் அவரது மகனின் வாழ்க்கை சற்று மேம்பட்டது. அவர் ஒரு விடுதியில் தங்க வைக்கப்பட்டார். பின் அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.
இன்று அவர் சுதந்திரமாக வாழ்கிறார். அதுமட்டுமல்லாமல் மன நிலம் தொடர்பான சிகிச்சை தேவைப்படுவோருக்கு அது தொடர்பான நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தருகிறார்.
அதேபோன்று மன நலம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளுக்காக பணியாற்றி வருகிறார். அவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதற்கான வழிகளை ஏற்படுத்தி கொடுக்கிறார்.
கவனித்து கொண்டவர்; `என்ன உதவி கிடைக்கும்?`
தென் ஆப்ரிக்காவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் மனநலம் சார்ந்த பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர் என அந்நாட்டின் மன நலம் தொடர்பான செயற்பாட்டாளர் பிலிப்பா ரீக்கி தெரிவிக்கிறார்.
குறிப்பாக 15-25 வயதுக்குட்பட்டோர் இடையே ஒவ்வொரு வருடமும் தற்கொலை எண்ணிக்கைகள் அதிகரித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.
ஆனால் மனநல சுகாதார பணியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோன்று போதுமான அளவில் மனநல மருத்துவர்களும் இல்லை.
தென் ஆப்ரிக்காவில் மன நலத்திற்கென வெறும் 22 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதில் பல மோசமான நிலையில் உள்ளன என்கிறார் ரீக்கி
இந்த நிறுவனங்களில் நிதி கையாடல்கள் நடப்பதாகவும், ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும் தென் ஆப்ரிக்க மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோன்று பொது மருத்துவமனைகளிலும் மனநல சிகிச்சைக்கென வருவோருக்கென வசதிகள் இல்லை.
“மனநல நோயாளிகளுக்கென ஒழுங்கான கழிவறைகள் இல்லை. மன நல வார்டுகளில் உள்ள கழிவறைகள் தனிப்பட்ட முறையில் இருக்காது. பல மருத்துவமனைகளில் மன நல நோயாளிகளுக்கென போதுமான மருத்துவமனை கிடையாது.” என்கிறார் அவர்.
பல நாட்டில் உள்ளது போன்றே இங்கேயும் மன நலம் தொடர்பான தவறான புரிதல்கள் உள்ளன. எனவே தேவைப்படுவோர் பலர் உதவிகளை கோருவதில்லை.
“ஆனால் கேள்வி என்னவென்றால் உதவி கோரப்பட்டாலும் அது கிடைக்குமா என்பதுதான்” என்கிறார் ரீக்கி
மன நல மருத்துவர்: `பத்து நிமிடத்திற்கு ஒரு நோயாளியை பார்க்க வேண்டும்`
வீரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ரஷ்யாவில் 45 வருடங்களாக மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
தற்போது அவர் அரசு சுகாதார மையம் ஒன்றில் மன நல மருத்துவராக பணியாற்றி வருகிறார். தனியார் கிளினிக் ஒன்றிலும் பணியாற்றுகிறார். அவர் தொழில்முறை காரணங்களுக்காக தனது விவரத்தை வெளியிட விரும்பவில்லை.
ரஷ்யாவில் மனநலம் தொடர்பான அருமையான சுகாதார வசதிகள் இருக்கின்றன என்று பிபிசியிடம் தெரிவித்த வீரா, ஆனால் பெரும்பாலும் அது பணக்காரர்களுக்கு மட்டும் என்று தெரிவித்தார்.
மாஸ்கோவில் முந்தைய காலங்களை காட்டிலும் தற்போது அதிக எண்ணிக்கையிலான மன நல மருத்துவர்கள் இருக்கலாம் ஆனால் ஏழைகளுக்கான போதைய சேவைகள் கிடைப்பதில்லை என்று அவர் தெரிவிக்கிறார்.
“சோவியத் காலத்தில் வெகுசில மனநல மருத்துவர்களே இருந்தனர்.” என்று பிபிசியிடம் தெரிவித்தார். “ஆனால் இப்போது ஓவ்வொரு கிண்டர்கார்டன் மற்றும் பள்ளியில் ஒரு மனநல மருத்துவர் உள்ளார்” அவர்களின் சேவை இலவசம்தான் என்கிறார் வீரா.
ஆனால் இதன் அர்த்தம் அனைவரும் சிறப்பான சேவையை அணுக முடியும் என்பதில்லை என்கிறார் வீரா.
வீரா பணிபுரியும் தனியார் கிளினிக்கில் ஒரு நாள் பணியில் 4-10 நோயாளிகளை பார்த்தால் போதும். ஒவ்வொரு நோயாளிக்கும் குறைந்தது 30 நிமிடம் ஒதுக்க வேண்டும். ஆனால் அரசு சுகாதார மையத்தில் ஒரு நாள் பணியில் 40 நோயாளிகளை பார்க்க வேண்டும். “ஒரு நோயாளிக்கு வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வழங்க வேண்டும்” என்கிறார் அவர்.
இலவசமாக மனநல சேவைகளை வழங்குவோருக்கு ஒன்றும் கிடைப்பதில்லை. ஆனால் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார பணியாளர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது என்கிறார்.
“இப்போது அனைவரும் பணத்தின் பின்னால் ஓடுகின்றனர். தனியார் மருத்துவமனைகள் அதிக செலவாகும். எனவே எல்லாரும் அதை அணுக முடியாது.” என மருத்துவர் வீரா தெரிவிக்கிறார்.
“பள்ளிகளில் மனநல மருத்துவர்கள் இருந்தாலும் மாறி வரும் நவீனகால சூழலில் குழந்தைகள் அதிகப்படியான மனநல பிரச்னைகளுக்கு ஆளாகும் நிலையில் 1000 குழந்தைகளுக்கு ஒரு மனநல மருத்துவர் என்பது போதாது,” என்கிறார் வீரா.
“தற்போதைய சூழலில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மேலும் மேலும் பல மனநல மருத்துவர்கள் தேவை,” என வீரா நம்புகிறார்.
மனநலம் பாதிக்கப்பட்டவரின் தாய்
ரேச்சல் பானிஸ்டரின் மூத்த மகளுக்கு மனநல அறிகுறிகள் தென்பட்டது. ஆனால் அவர் உணவு உண்பதில் குறைபாடுகள் ஏற்பட்டன. இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம்ஷைரில் வசிக்கிறார் இவர். ஆனால் இவர் மகளின் சிகிச்சைக்கு சுமார் 500 கிமீட்டர் வரை பயணம் செய்ய நேர்ந்தது.
“சுகாதார ஊழியர்கள் அதிக மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே பலர் உடல்நிலை சரியில்லாமல் விடுப்பில் செல்கின்றனர். எனவே மருத்துவர்களை காண அரிதாகவே அனுமதி கிடைக்கின்றன.” என்கிறார் ரேச்சல்.
ரேச்சல் மகளின் உணவு குறைப்பாடு நாளுக்கு நாள் மோசமடைந்தது. அவர் எடை குறைய தொடங்கினார். அவரின் மொத்த உடல் நலமும் பாதிக்கப்பட்டது.
ரேச்சல் மற்றும் அவரின் மகள் அவர்களது வீட்டில் இருந்து 80 கிமீ தொலைவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். அதன்பின் இரண்டாவதாக 160கிமீட்டர் தொலைவில் அனுப்பப்பட்டனர் அதன்பின் 500கிமீ தூரத்தில் ஸ்காட்லாந்திற்கு விமான பயணத்தில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
மருத்துவமனையில் தனது மகளை விட்டுவிட்டு வந்தபோது தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று தனக்கு தோன்றியதாக ரேச்சல் கூறுகிறார்.
தனது வீட்டின் அருகாமையிலேயே இவ்வாறு ஒரு மருத்துவ வசதியை பெற முடியாததற்கு காரணம் அரசு போதிய அளவில் நிதி வழங்காமை மற்றும் சுகாதார சேவைகளுக்கான நிதியை பிரிட்டிஷ் அரசாங்கம் குறைத்தவையே காரணம் என ரேச்சல் புரிந்து கொண்டார்.
ரேச்சலின் சூழல் குறித்து பதிலளித்த பிரிட்டன் சுகாதாரத் துறை, சிகிச்சைக்காக குழந்தைகளை தொலைதூரத்தில் விட்டு விட்டு வரும் துயரத்தை முடிவுக்கு வரும் பணியில் முழுவதுமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சமமின்மை மற்றும் ஊதிய குறைப்பு
உலகின் ஏழை நாடுகளை காட்டிலும் பணக்கார நாடுகள் மனநலம் தொடர்பான சுகாதார சேவையில் தனிநபருக்கு 650 மடங்கு பணம் செலவழிக்கின்றன என சமீபத்திய உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இருப்பினும் அதே அறிகையில் உலகின் பணக்கார நாடுகள் 2017 – 2020 கால கட்டத்தில் மனநல மருத்துவமனைகளில் ஒரு தனி நபருக்கு செய்யும் செலவு பாதியாக குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது.
ராயல் கல்லூரி ஆஃப் சைகாட்ரிக்ஸ் கல்லூரியின் மருத்துவர் ட்ரூடி, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளிலும்கூட மனநல தொடர்பான பிரச்னைகளுக்கு போதுமான கவனம் கொடுப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மனநலம் சார்ந்த பிரச்னைகளை பேசுவதற்கு மக்கள் இன்னும் தயங்குகிறார்கள் என்று தெரிவித்தார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
Source: BBC.com