நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் ஒருவரை சந்தித்த பிறகுதான் யூடியூபர் மாரிதாசுக்கு எதிரான வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்ததாக அவர் ட்விட்டரில் இட்ட பதிவை மேற்கோள்காட்டி ஜூலை மாதம் மதுரை உயர் நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
இதையடுத்து ஒரு யுடியூப் சேனலில் பேசிய சங்கர், மேல் மட்ட நீதித்துறை முழுவதிலும் ஊழல் படிந்திருப்பதாக விமர்சித்தார். இதையடுத்து அவர் மீது இரண்டாவது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.
நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதியப்பட்டது. மேலும் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.கடந்த ஒன்றாம் தேதி மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், தன் மீது தொடரப்பட்ட வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அதேபோல் , தன் மீது நீதிமன்றம் அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்கு காரணமாக கூறும் காணொளி பதிவுகளையும், சமூக வலைதளப் பதிவுகளும் தனக்கு வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இதனை அடுத்து நீதிமன்ற பதிவாளரிடம் அதன் நகல்களை சவுக்கு சங்கரிடம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத்தில் அடுத்த பதில் மனு தாக்கல் செய்ய குறைந்தது 6 வார கால அவகாசம் வேண்டுமென சவுக்கு சங்கர் தரப்பில் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தனர். அதற்கு நீதிமன்றம் இவ்வழக்கு தொடர்பாக இனி எவ்வித பதிவையும் எங்கேயும் குறிப்பாக சமூக வலைத்தள பக்கங்களில் பதிய மாட்டேன் என எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் கொடுத்தால் பதில் மனு தாக்கல் செய்ய கேட்ட கால அவகாசம் வழங்க பரிசீலனை செய்யப்படும் என நீதிமன்றம் கூறியது.
ஆனால், அதற்கு சவுக்கு சங்கர் தரப்பில், உறுதி வழங்க இயலாது என தெரிவிக்கப்பட்டது. இதனால் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.சவுக்கு சங்கரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார். இதைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக நீதிபதிகள் சவுக்கு சங்கருக்கு ஆறு மாத கால சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டனர். மேலும், சவுக்கு சங்கரால் நீதிமன்றம் குறித்து அவதூறாக பதிவு செய்யப்பட்டிருந்த பதிவுகள் அனைத்தையும் சமூகவலைத்தள பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்க தொழில்நுட்பத் துறைக்கு உத்தரவிட்டனர். தீர்ப்பின் நகல் சவுக்கு சங்கருக்கு கிடைக்கப்பெற்ற உடன் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என காவல் துறையினர் தெரிவித்தனர்.
யார் இந்த சவுக்கு சங்கர்?
சவுக்கு சங்கர் என அறியப்படும் ஆச்சிமுத்து சங்கர், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றியவர்.
2008ம் ஆண்டு இரண்டு அதிகாரிகளுக்கு இடையிலான தொலைபேசி உரையாடலின் குரல் பதிவை ஊடகங்களுக்கு கசியவிட்ட விவகாரத்தில் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். 2010ஆம் ஆண்டு சவுக்கு என்கிற தமிழ் செய்தி இணையதளத்ததை நிறுவி, தீவிரமான சர்ச்சைக்கு இடமான கட்டுரைகளை வெளியிட்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் நடத்திய வந்த சவுக்கு நெட் என்ற இணையதளத்தில் பிறரை புண்படுத்தும் உள்ளடக்கங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் அதற்கு தடை விதித்தார். பிரபல யூடியூப் பக்கங்களிலும் அவர் தொடர்ந்து அளித்து வந்த பேட்டிகள் சர்ச்சையையும் விவாதத்தையும் தூண்டின.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com