கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பிரிட்டனில் மக்கள் செல்லப்பிராணிகளாக நாய்க்குட்டிகளை அதிகம் வாங்க முயற்சிக்கின்றனர்.
ஆனால் நாய்க்குட்டிகள் வாழ்க்கையை அனுபவிக்க வாங்க வேண்டும், கொரோனா வைரஸின் காரணமாக வாங்கக்கூடாது என பிரிட்டனின் நாய்கள் நல அமைப்பான கென்னல் க்ளப் கூறியுள்ளது.
ஏன் வாங்கக்கூடாது?
முடக்கநிலை காரணமாக உணர்ச்சிவசப்பட்டு செல்லப்பிராணிகள் வாங்கக்கூடாது. அதன் வருங்காலத்தை கருத்தில் கொண்டே வாங்க வேண்டும் என மக்களை அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
ஊரடங்குக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டதும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மக்கள் தங்கள் அமைப்பின் வலைத்தளத்தில் நாய்க்குட்டிகளைப் பற்றி தேடுவது, இரு மடங்காகியுள்ளது என அந்த அமைப்பு கூறியுள்ளது.
மக்கள் செல்லப்பிராணிகளைப் பெறுவதற்காக இந்நேரத்தில் அவசரப்படக்கூடாது என பட்டர்சீ டாக்ஸ் மற்றும் ஆர்எஸ்பிசிஏ போன்ற தொண்டு நிறுவனங்கள் கூறியுள்ளன.
இவ்வாறு செல்லப்பிராணிகள் வாங்கப்பட்டால் மக்கள் இயல்புநிலைக்கு திரும்பும்போது இந்த விலங்குகள் கைவிடப்படும். அதனுடன் அவர்கள் நேரம் செலவிட முடியாமல் போகும் என்ற கவலையாலேயே அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
“நீங்கள் இந்த தற்காலிக சூழ்நிலையில் செல்லப்பிராணிகளை வாங்க நினைத்தால் நீங்கள் நினைவுகூர வேண்டியது ஒன்றுதான். செல்லப்பிராணிகளை கவனிப்பது என்பது மிகப்பெரிய பொறுப்பாகும். அதை நம்மால் அதிக நாட்கள் செய்ய முடியுமா என்பதையும் எண்ணவேண்டும். அவ்வாறு முடியும் என்று நினைத்தால் மட்டுமே வாங்க வேண்டும்” என்கிறார் பட்டர்சீ டாக்ஸ் இல்லத்தின் செய்தி தொடர்பாளர்.
பிரிட்டன் அரசு கூறியுள்ள சமூக விலகல் மற்றும் தன்னைத்தானே தனிமைப்படுத்துதல் என்ற அறிவுரைப்படி தற்போது செல்லப்பிரானிகள் வாங்குவது சிரமம் என ஆர்எஸ்பிசிஏ நியூஸ்பீட்டிடம் கூறியுள்ளது.
பிடிஎஸ்ஏ என்னும் செல்லப்பிராணிகளின் தொண்டு நிறுவனத்தின் கூற்றுப்படி ஒரு நாய் வளர்க்க மருத்தவ செலவுகள் ஏதும் இல்லாமல் 4500 யூரோவிலிருந்து 13000 யூரோவரை செலவாகும்.
ஒரு நாய்க்குட்டி வளர்த்தால் கூட தடுப்பூசி, உணவு மற்றும் பொம்மை என 370 யூரோவிலிருந்து 425 யூரோவரை செலவாகும்.
வாங்கினால் என்ன பலன்?
ஆனால் 26 வயதான சாரா போன்றவர்கள் முடக்கத்தின் விதிமுறைகளை மீறாமல் செல்லப்பிராணிகள் வாங்குவதற்கான வழியை அறிந்துள்ளனர்.
நேரடியாக இல்லாமல் அவர் விர்சுவலாக அதாவது இணையம் மூலம் தான் புதிதாக வாங்கியுள்ள மால்டிபூ வகை நாய்க்குட்டியுடன் தொடர்பில் உள்ளார் சாரா.
காணொலிக் காட்சி அழைப்பு மூலமாக வாரம் ஒரு முறை தன்னுடைய நாய்க்குட்டியான வின்னியை பார்ப்பதாக ரேடியோ 1 நியூஸ்பீட்டுக்கு கூறியுள்ளார்.
“அதை வைத்திருக்கும் இடத்திலிருந்து அந்த நாய்க்குட்டியின் புகைப்படம் அனுப்பப்படும். மேலும் அதன் பெற்றோர் மற்றும் அதற்கு பாலூட்டப்பட்டாதா என்பது பற்றியும் தகவல் கிடைக்கும்,” என்கிறார் சாரா.
சாராவுக்கு எப்போதும் ஒரு நாய்க்குட்டி வாங்க ஆசை இருந்ததுண்டு. அதை அலுவலகம் எடுத்து செல்லவும் அவருக்கு ஆசை. ஆனால் வேலைப்பளு காரணமாக அவரால் அதை இப்போது வரை செய்ய முடியவில்லை.
“இப்போது ஒரு நாய்க்குட்டி வாங்கினால் அதை வீட்டில் வைத்து பயிற்சியளிக்க முடியும். இயல்பு நிலைக்கு திரும்பும்போது எங்களிடம் ஒரு பயிற்சியளிக்கப்பட்ட நாய் இருக்கும். எங்களின் வாழ்க்கையில் ஒரு புது நண்பரும் இணைவார்,” என்கிறார் சாரா.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com