Press "Enter" to skip to content

இந்தியா-சீனா எல்லை தகராறு: அக்சாய் சீனா முதல் அருணாச்சல் வரை பதற்றத்திற்கான காரணம் என்ன?

குர்பிரீத் சைனி
பிபிசி நிருபர்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள பாங்கோங் த்சோ ஏரியில் சீனா தனது ரோந்து படகுகளின் நடமாட்டத்தை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த ஏரியின் அருகே இந்திய மற்றும் சீன வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்தப் பகுதி லடாக்கின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு அருகில் உள்ளது.

இதற்கு முன்னதாக இரு நாடுகளும் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் தங்கள் துருப்புக்களின் இருப்பை அதிகரித்து வருவதாக செய்தி வந்தது.

அதேபோல், அக்சாய் சீனாவின் கால்வன் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தின் சில கூடாரங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக இந்தியா கூறியது. அதன்பிறகு அங்கு தனது ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஆனால் சீனாவோ, கால்வன் பள்ளத்தாக்கு அருகே சட்டவிரோதமாக பாதுகாப்பு தொடர்பான கட்டுமானங்களை இந்தியா செய்து வருவதாக குற்றம் சாட்டுகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே பல்வேறு பகுதிகளில் இத்தகைய மோதல்கள் அதிகரித்திருப்பதால், சிக்கல்களும் அதிகரித்துள்ளன. இதற்கு காரணம் என்ன?

இந்தியா, சீனாவுடன் 3,488 கி.மீ எல்லையை பகிர்ந்து கொள்கிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் வழியாக இந்த எல்லைச் செல்கிறது. மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த எல்லையின் மேற்குப் பகுதியில் ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பகுதியில் இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மற்றும் கிழக்குப் பகுதியில் சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேசம் இடம் பெற்றுள்ளன.

இருப்பினும், இரு நாடுகளும் இன்னும் முழுமையாக எல்லைகளை வரையறுக்கவில்லை. ஏனென்றால் பல பகுதிகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எல்லை தகராறு நீடிக்கிறது.

தற்போது மேற்குப் பகுதியில் உள்ள அக்சாய் சீனா தனக்கு சொந்தமானது என இந்தியா கூறுகிறது. 1962 ஆம் ஆண்டு இந்தியாவுடனான போரின் போது, சீனா இந்தப் பகுதி முழுவதையும் ஆக்கிரமித்தது.

அதே நேரத்தில், கிழக்குப் பகுதியில் அருணாச்சல பிரதேசம் தனக்கு சொந்தமானது என்று உரிமை கோரும் சீனா, இது தெற்கு திபெத்தின் ஒரு பகுதி என்று கூறுகிறது. திபெத்துக்கும் அருணாச்சல பிரதேசத்திற்கும் இடையிலான மக்மஹோன் கோடு தொடர்பான ஒப்பந்தத்தையும் சீனா ஏற்கவில்லை. 1914 இல் இந்த ஒப்பந்தம் பிரிட்டிஷ் இந்தியா மற்றும் திபெத்தின் பிரதிநிதிகளால் கையெழுத்திடப்பட்டபோது, தான் அங்கு இல்லை என்று சீனா கூறுகிறது. சீனாவின் ஒருபகுதியாக திபெத் இருப்பதால், அது தானாக எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் அந்நாடு கூறுகிறது.

1914 இல், திபெத் சுதந்திரமான நாடாக இருந்தாலும், அது பலவீனமானதாக இருந்தது. எனவே, சீனா ஒருபோதும் திபெத்தை ஒரு சுதந்திர நாடாக கருதவில்லை. 1950 இல், சீனா திபெத்தை முழுவதுமாகக் கைப்பற்றிவிட்டது.

அதாவது, அருணாச்சல பிரதேசத்தில் மக்மஹோன் கோட்டை ஏற்காத சீனா, அக்சாய் சீனா மீதான இந்தியாவின் உரிமை கோரலையும் நிராகரிக்கிறது.

இந்த மோதல்கள் காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைகள் முடிவு செய்யப்படாமல் தொடர்கிறது. எது எவ்வாறு இருந்தாலும், இருக்கும் நிலையை அப்படியே தக்க வைத்துக் கொள்ள, எல்லை கட்டுப்பாட்டுக் கோடு அதாவது எல்.ஓ.சி என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இருப்பினும், அது இன்னும் தெளிவுபடுத்தப்படாமல் இருக்கிறது. இரு நாடுகளும் தங்களது எல்லை கட்டுப்பாடுக் கோடு என்று வெவ்வேறு வரையறைகளை முன்வைக்கின்றன.

இந்த எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டில், பல பனிப்பாறைகள், பனிப் பாலைவனங்கள், மலைகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றன. எல்.ஓ.சி-யை ஒட்டியப் பகுதிகளில் இதுபோன்ற பல பகுதிகள் உள்ளன, அங்கு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே பதற்றங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

134 கி.மீ நீளமுள்ள பாங்கோங் த்சோ ஏரி இமயமலையில் சுமார் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த ஏரியின் 45 கி.மீ பரப்பளவு இந்தியாவிற்கும், 90 கி.மீ பரப்பளவு சீனாவிற்கும் உரித்தானது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு, இந்த ஏரியின் வழியாகவே செல்கிறது.

மேற்குப் பகுதியில் சீனாவின் அத்துமீறல்களில் மூன்றில் ஒரு பங்கு இந்த பாங்காங் த்சோ ஏரியை சுற்றியுள்ள பகுதிகளிலேயே நடைபெறுவதாக கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை கட்டுப்பாட்டுக் கோடு தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லாததே இதற்குக் காரணம் என்பது வெளிப்படையான விஷயம். இரு நாடுகளும் வெவ்வேறு எல்.ஓ.சியை முன்வைக்கின்றன.

எனவே, சர்ச்சைக்குரிய பகுதியில், இரு நாடுகளின் வீரர்களிடையே பல முறை மோதல்கள் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் அண்டை நாட்டின் வீரர்கள் தங்கள் நாட்டு எல்லைக்குள் ஊடுருவுவதாக அவர்கள் நினைக்கிறார்கள்.

இந்த ஏரி மிகவும் முக்கியமானது, ஏனெனில் இந்த ஏரி சுஷூல் பள்ளத்தாக்கின் வழியில் வருகிறது, இந்தியப் பிரதேசத்தில் தாக்குதல் நடத்த சீனா இந்த வழியைப் பயன்படுத்தலாம். 1962 போரின் போது சீனா தனது பிரதான தாக்குதலைத் தொடங்கிய இடம் இது. கடந்த சில ஆண்டுகளில், சீனாவும் பாங்கோங் த்சோ ஏரியின் கரையோரத்தில் உள்ள தனது இடத்தில் சாலைகளை அமைத்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன.

அக்சாய் சீனாவில் இருக்கும் சர்ச்சைக்குரிய பகுதியான கால்வான் பள்ளத்தாக்கு, லடாக் மற்றும் அக்சாய் சீனா இடையே இந்தோ-சீனா எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது.

இங்கே எல்லை கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஓ.சி) சீனாவை இந்தியாவில் இருந்து பிரிக்கிறது. இந்த பள்ளத்தாக்கு சீனாவின் தெற்கு சிஞ்சியாங் மற்றும் இந்தியாவின் லடாக் வரை பரவியுள்ளது.

இந்தப் பகுதி இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது என்று கூறுகிறார் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும் சர்வதேச விவகார நிபுணருமான எஸ்.டி.முனி. ஏனெனில் இந்தப் பகுதியில், பாகிஸ்தான், சீனாவின் ஜின்ஜியாங் மற்றும் லடாக்கின் எல்லைகள் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார். 1962 போரின் போது கூட, கால்வன் நதியின் இந்த பகுதி போரின் முக்கிய மையமாக இருந்தது.

கால்வன் பள்ளத்தாக்கில் இந்தியா கட்டுமானப்பணிகளை செய்வதை சட்டவிரோதமானது என்று சீனா சொல்கிறது. அதற்குக் காரணம், இருக்கும் எல்.ஓ.சி.யை ஏற்றுக்கொள்வதாகவும், அங்கு புதிதாக எதையும் உருவாக்க மாட்டோம் என்று இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் உள்ளது என்று சொல்கிறார் எஸ்.டி முனி. ஆனால் சீனா ஏற்கனவே அங்கு தேவையான ராணுவ கட்டுமானங்களை செய்துவிட்டு, தற்போது ஏற்கனவே இருக்கும் நிலைமையை பராமரிப்பது பற்றி பேசுகிறது. ஆனால், தனது நிலையை வலுப்படுத்த, இந்தியாவும் அங்கு கட்டுமானங்களை உருவாக்க விரும்புகிறது என்றும் எஸ்.டி முனி கூறுகிறார். .

டோக்லாம்

டோக்லாம் தொடர்பாக 2017 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கலாம். 70-80 நாட்கள் நீடித்த தகராறை பேச்சுவார்த்தை மூலமாக இரு நாடுகளும் தீர்த்துக் கொண்டன.

டோக்லாம் பீடபூமி பகுதியில் சாலை அமைக்க சீனா முயற்சி மேற்கொண்டதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தபோதுதான் விவகாரம் தொடங்கியது.

பார்க்கப்போனால், டோக்லாம் விவகாரம் என்பது சீனாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான ஒரு பிரச்சனை. ஆனால், இந்தப் பகுதி சிக்கிம் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இது இந்தியா, திபெத் மற்றும் பூட்டான் என்ற மூன்றையும் இணைக்கும் பகுதியாக உள்ளது.

டோக்லாமிலிருந்து சீனாவிற்கான தூரமும் குறைவுதான். இந்த இடத்திற்கு பூட்டான் மற்றும் சீனா ஆகிய இரண்டுமே உரிமை கோருகின்றன. பூட்டானின் உரிமைகோரலை இந்தியா ஆதரிக்கிறது.

சீனாவின் முயற்சிகளுக்கு இந்தியா பதிலடி கொடுக்கக்கூடிய இடம் டோக்லாமுக்கு நெருக்கமாக இருக்கும் சிக்கிம்தான் என்று இந்திய ராணுவத்தினர் நம்புகின்றனர். இந்திய ராணுவம் எல்லையில் உள்ள இமயமலைப் பகுதியை புவியியல் ரீதியாக புரிந்துகொண்டு அதன் நன்மைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரே இடம் இதுதான். உயரமாக இருக்கும் இந்த இடத்தின் நன்மை இந்தியாவுக்கு கிடைக்கும் என்பதோடு, சீன ராணுவம் இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையில் சிக்கிவிடும் என்பதும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

தவாங்

தவாங்கை திபெத்தின் பகுதியாகக் கருதும் சீனா, தவாங் மற்றும் திபெத்துக்கு நிறைய கலாச்சார சமத்துவம் இருப்பதாகக் கருதுகிறது. தவாங் பெளத்தர்களின் முக்கிய ஆலயமாகும்.

எனவே, தவாங்கை தன்னுடன் இணைத்துக் கொள்ளவும், திபெத் போன்ற முக்கிய பெளத்த தளங்களில் தனது பிடியை வலுப்படுத்தவும் சீனா விரும்புவதாக கூறப்படுகிறது.

தவாங் மடத்திற்கு தலாய் லாமா வருகை தந்ததற்கு சீனா கடுமையாக எதிர்த்ததற்கு இதுவே காரணம்.

உண்மையில், 1914 இல், பிரிட்டிஷ் இந்தியா மற்றும் திபெத்தின் பிரதிநிதிகளுக்கு இடையே ஒப்பந்தம் எட்டப்பட்டபோது, அதில் அருணாச்சல பிரதேசத்தின் வடக்கு பகுதி, தவாங் மற்றும் தெற்கு பகுதி ஆகியவை இந்தியாவின் ஒரு பகுதியாக குறிப்பிடப்பட்டது.

1962 ல் நடந்த இந்தியா-சீனா போரின்போது, சீனா தவாங்கைக் கைப்பற்றியது. ஆனால், அருணாச்சல் அமைந்திருக்கும் பகுதி புவியியல் ரீதியாக இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. எனவே சீனா போரை வென்றபோதிலும் தவாங்கிலிருந்து பின்வாங்கியது.

நாதுலா

இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தையும் தெற்கு திபெத்தின் சும்பி பள்ளத்தாக்கையும் இணைப்பது இமயமலையில் உள்ள நாதுலா கணவாயே ஆகும். நாதுலா கணவாய், சிக்கிமின் தலைநகரான காங்டோக்கிலிருந்து 54 கி.மீ தொலைவில் உள்ளது.

14,200 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா வழியாகத்தான் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் அமைந்துள்ள கைலாஷ் மானசரோவருக்கு இந்திய யாத்ரீகர்கள் செல்வார்கள் என்பதால், நாதுலா இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது.

1962 ஆம் ஆண்டு இந்திய-சீனப் போருக்குப் பிறகு மூடப்பட்ட நாதுலா, 2006ஆம் ஆண்டில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்கள் உருவான பிறகு திறக்கப்பட்டது. ஏனெனில் 1890 உடன்படிக்கையின் படி, நாதுலா எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எந்தவிதமான சர்ச்சையும் இல்லை.

ஆனால் இந்த ஆண்டு மே பத்தாம் தேதியன்று, நாதுலா கணவாய் அருகே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்தி வந்தது.

எல்லை தகராறுகளை தீர்க்க முயற்சி

இந்தத் தகராறுகளை தீர்க்க இந்தியாவும் சீனாவும் எல்லை நிர்வாக குழுக்களை அமைத்துள்ளதாக கூறுகிறார் இந்தியா-சீனா விவகாரங்களை கண்காணிக்கும் கீதா கோச்சர்.

“எல்லைகளை நிர்ணயிக்கும் பணி முடிவடையும் வரை, எல்லைப் பிரச்சினையில் எத்தனை சிக்கல்கள் வந்தாலும், அவை பெரும் பதற்றமாக மாறுவதைத் தடுப்பது இரு தரப்பினருடைய வேலையாகும். அப்போதுதான் போர்ச் சூழல் எழாது” என்கிறார்.

எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்குவதற்காக இந்தியாவும் சீனாவும் சிறப்பு பிரதிநிதிகளை (எஸ்.ஆர்) நியமித்துள்ளன. இந்த சிறப்பு பிரதிநிதிகள் இதுவரை 20 க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தியுள்ளன.

இந்தியா-சீனா எல்லை தகராறுக்கான சிறப்பு பிரதிநிதிகளின் (எஸ்.ஆர்) 22 வது கூட்டம் புதுடெல்லியில் 2019 டிசம்பர் 21 அன்று நடைபெற்றது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் தலைமையில் இந்திய பிரதிநிதிக் குழு பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Source: BBC.com

More from உலகம்More posts in உலகம் »