ஹாங்காங்கில் சமீபத்தில் சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அந்த பிராந்தியத்தின் பிரபல ஊடக அதிபர் ஜிம்மி லாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஹாங்காங்கில் ஜனநாயகத்தை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்களின்போது, அதில் பங்கெடுத்த செயல்பாட்டாளர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்த்து அவர் செயல்பட்டதாகவும் காவல்துறையினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
71 வயதாகும் ஜிம்மி லாய், பிரிட்டிஷ் கடவுச்சீட்டும் வைத்துள்ளார். அவர் மீது சட்டவிரோதமாக கூடியது, போராட்டத்தில் ஈடுபட தூண்டியது போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் பின்னர் ஜிம்மி லாய் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், ஜிம்மி லாயை “கலவர ஆதரவாளர்” என்று குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.
ஹாங்காங்கில் ஜிம்மி லாய் நடத்தி வரும் ஆப்பிள் டெய்லி என்ற நாளிதழ் அலுவலகத்திலும் காவல்துறையினர் சோதனை நடத்தினார்கள்.
அதன் பிறகு ஒரு கட்டத்தில்அவரை கைவிலங்கு பூட்டி காவல்துறையினர் அழைத்துச் சென்றார்கள். அவரது பெயரைக் குறிப்பிடாமல் ஹாங்காங் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “39 முதல் 72 வயது மதிக்கத்தக்க ஏழு பேர் அன்னிய சக்திகளுடன் கைகோர்த்து அரசுக்கு எதிராக செயல்பட்டதாக எழுந்த சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கைக்கு ஜிம்மி லாய் மட்டுமின்றி அவரது இரு மகன்கள், நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற இணைய இதழின் இரு தலைமை நிர்வாகிகளும் உள்ளாகினார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com