இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிராந்தியத்தில் இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதைத் தாங்கள் எதிர்ப்பதாகவும், லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவால் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டது என்றும் சீனா தெரிவித்துள்ளது.
சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ள லடாக், ஜம்மு – காஷ்மீர், அருணாச்சல பிரதேசம், சிக்கிம், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய பகுதிகளில் இந்தியாவின் பாதுகாப்பு படைகள் எளிதில் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக கட்டப்பட்ட 44 பாலங்களின் பயன்பாட்டை இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தொடங்கி வைத்தார்.
இதன் பின்னணியில் இந்தியா குறித்து சீனா இவ்வாறு கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளது.
எல்லைப்பகுதியில் இந்தியா உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருவதே இந்தியா மற்றும் சீனா இடையிலான பதற்றத்திற்கு முக்கிய காரணம் என்று குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன், பதற்றத்தை உண்டாக்கும் வகையிலான எந்த நடவடிக்கைகளையும் இரு நாடுகளும் மேற்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்டார்.
எல்லைப் பகுதியில் ராணுவ மோதலை உண்டாக்கும் நோக்கில், இந்தியா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இருநாடுகளும் ஒப்புக்கொள்ளப்பட்டபடி எல்லைப் பகுதியில் அமைதியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டும் என்று சீனா வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கால் நேற்று திறந்து வைக்கப்பட்ட பாலங்கள் இந்தியப் படையினர் மற்றும் ஆயுதங்களின் போக்குவரத்தை வேகமாக மேற்கொள்ள உதவும் என்று இந்தியா தெரிவிக்கிறது.
இந்த 44 பாலங்களின் பயன்பாட்டையும் நேற்று தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங், “இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளில் நிலவும் சூழல் உங்களுக்கு தெரியும். முதலில் பாகிஸ்தானாலும் இப்போது சீனாவாலும் எல்லை பிரச்சனை உருவாக்கப்பட்டு வருகிறது. பதற்றம் நிலவும் இந்த இரு நாடுகளுடனும் இந்தியா சுமார் 7,000 கிலோ மீட்டர் நீள எல்லையை பகிர்ந்து கொள்கிறது,” என்று தெரிவித்திருந்தார்.
இந்த 44 பாலங்களில் ஏழு பாலங்கள் லடாக் பிராந்தியத்தில் அமைந்துள்ளன.
இந்த பாலங்கள் பயன்பாட்டுக்கு வருவது பொது மக்களுக்கும் பயன் அளிக்கும் என்று ராஜ்நாத் சிங் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
ஜூன் மாதம் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரும் மோதிக் கொண்டதில் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறிய சீன அரசின் அலுவல்பூர்வ ஏடான குளோபல் டைம்ஸ், அது சீன ராணுவத்தினர் காயமடைந்ததா உயிரிழந்ததா என்று கூறவில்லை.
அதன்பின்பு நடந்த வெளியுறவு மற்றும் ராணுவ மட்டத்திலான பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து குறிப்பிட்ட எல்லைப் பகுதிகளில் இரு நாடுகளும் படைகளை விலக்க வழிவகுத்தது. எனினும், இந்த விவகாரத்தில் இன்னும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை.
பாகிஸ்தான் மற்றும் சீனா உடனான எல்லை
இந்திய நிர்வாகத்தின் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீர் பகுதியில் நடுவே 740 கிலோமீட்டர் தூரத்தில் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு (Line of Control – LoC) இருக்கிறது.
இதுமட்டுமல்லாது பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களும் பாகிஸ்தான் உடனான எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
3,488 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த மெய்யான கட்டுப்பாட்டு கோடு (LAC) , கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டை விட சுமார் ஐந்து மடங்கு நீளமானது. இது இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லையாகும்.
யூனியன் பிரதேசமான லடாக் மற்றும் பிற இந்திய மாநிலங்களின் எல்லையை ஒட்டி இது அமைந்துள்ளது.
கோடு என்று இது அழைக்கப்பட்டாலும் இது உண்மையாகவே ஒரு கோடு கிடையாது. ஏனென்றால் இது இதுவரை தெளிவாக வரையறுக்கப்படவில்லை. மெய்யான கட்டுப்பாட்டு கோடு என்று இந்திய அரசும் சீன அரசும் வெவ்வேறு எல்லைப் பகுதிகளை வரையறுக்கின்றன. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு அரசுகள் இடையே ஒருமித்த கருத்து எதுவும் ஏற்படவில்லை.
இந்த பகுதியில்தான் ஆயுதங்கள் இல்லாத கைகலப்பு, நேருக்கு நேர் எதிர் நின்று சண்டையிடும் நிலைக்கு செல்வது, சிறு அளவிலான சண்டைகள் மட்டுமல்லாது ஒரு போரும் நடந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
Source: BBC.com